பக்கங்கள்

29 ஜூலை 2010

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி,தமிழர்கள் உற்சாகம்.


இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை உலகமயப்படுத்தும் வகையில் கடந்த வருடம் பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத் தமிழரான பரமேஸ்வரன் சுப்பிரமணியம் கள்ளத்தனமாக உணவு உட்கொண்டிருக்கவில்லை என்று இன்று நிரூபணம் ஆகி உள்ளது.


பரமேஸ்வரன் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 23 நாட்கள் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். பின் ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.


ஆனால் இந்த உண்ணாவிரதம் இடம்பெற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பிரித்தானிய ஆங்கில பத்திரிகைகளான டெய்லி மெய்ல், சன் ஆகியன பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தின்போது இரகசியம்,ஆன முறையில் ம்க்டொனால்ட் பேகரைச் சாப்பிட்டிருக்கின்றார் என்று குறிப்பிட்டு செய்தி பிரசுரித்தன.

ஆனால் இச்செய்தி பிழையானது என்றும் அவருடைய நற்பெயருக்கும், நன்மதிப்புக்கும், கௌரவத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றும் குற்றஞ்சாட்டி பரமேஸ்வரன் லண்டன் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று லண்டன் மேல்நீதிமன்ற நீதியரசர் எடி முன்னிலையில் வந்தது.

பரமேஸ்வரனின் சார்பில் சட்டத்தரணி மக்னஸ் பொய்ட் ஆஜராகி வாதாடினார். அவர் நீதிமன்றில் தெரிவித்தவை வருமாறு:

”எனது கட்சிக்காரர் உண்ணாவிரதத்தை உத்தியோகபூர்வமாக முடிக்கும் வரை உணவு உட்கொண்டிருக்கவே இல்லை.பிரித்தானிய நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி இருந்த உயர் அதிகாரி பரமேஸ்வரன் இரகசியமான முறையில் பேகர் உண்டமையை விசேட கருவி ஒன்றைப் பயன்படுத்தி பொலிஸார் கண்டு பிடித்திருக்கவில்லை என்றும் பரமேஸ்வரன் பேகர் உண்டமைக்கான வீடியோ ஆதாரம் எதுவும் கிடையாது என்றும் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
எனவே இப்பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்த செய்தி முற்றிலும் தவறானது ஆகும். இப்பத்திரிகைகள் பிழையான செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் சர்வதேசம் பூராவும் உள்ள தமிழ் சமூகம் பரமேஸ்வரன் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார், ஏமாற்றி விட்டார் என்றே நம்பி விட்டது. எனவே பரமேஸ்வரன் இச்செய்தியின் காரணமாக பாரதூரமான பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தது.”

இரு பத்திரிகைகள் சார்பிலும் சட்டத்தரணி விக்டோரியா ஜொலிபே ஆஜரானார். அவர் இரு பத்திரிகைகளும் அச்செய்தி தவறானது என்பதை ஒப்புக் கொள்கின்றன. அதற்காக முழுமனதுடன் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றன என்றும் உரிய நட்டஈடு வழங்கத் தயாராக உள்ளன என்றும் நீதிமன்றில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இரு பத்திரிகைகளும் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரின.அத்துடன் 77500 ஸ்ரேலிங்க் பவுண்டுகளை பரமேஸ்வரனுக்கு நட்டஈடாக வழங்கவும் சம்மதித்தன. இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றி குறித்து பரமேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

”கடந்த 08 மாத காலமாக என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனது உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட எண்ணினேன்.இந்தப் பிழையான பத்திரிகைச் செய்தியால் ஏராளமான நண்பர்களை இழக்க நேர்ந்தது.எனது குடும்ப அங்கத்தவர்கள் கூட என்னை அலட்சியப்படுத்தினர்.

தமிழ் சமூகம் என்னைப் புறக்கணித்து விட்டது.ஆனால் அச்செய்தியில் எந்த உண்மையும் கிடையாது என்று இரு பத்திரிகைகளும் தற்போது ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளன.

நான் எந்தத் தவறும் செய்திருக்கவில்லை என்பதை என்னைப் புறக்கணித்த எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.எனது உண்ணா விரதத் தியாகம் உண்மையானது.”என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.