பக்கங்கள்

26 மே 2010

உலகத்தமிழர்களே ஒருமணி நேரம் எங்களுக்காக ஒதுக்குங்கள்!மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் அவசர கோரிக்கை!


அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு எங்களை அனுப்பி வையுங்கள் என்று மலேசிய முகாம்களில் தத்தளிக்கும் 61 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நக்கீரன் இணையதளம் மூலம் விடுத்துள்ள கோரிக்கையில்,
உலகத் தமிழர்களின் பார்வைக்கு மரணத்தின் வாயிலில் இருந்து ஈழத் தமிழர்களின் கண்ணீர் கோரிக்கை. உலகத் தமிழினமே உங்களை நம்பித்தான் உயிரை பணயமாக வைத்து, பழுதான படகில் புறப்பட்டோம். நடுக்கடலில் சிக்கி தவித்தபோது மனிதாபிமானத்தோடு காப்பாற்றியது மலேசிய அரசு.
ஆனால், வதைமுகாம்களில் நாங்கள் பட்ட சித்ரவதையைவிட, இப்போது அதிகமாக பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளும் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்ற கோரிக்கையை ஒரு மாதம் கழித்து உண்ணா நிலையை தொடங்கி உள்ளோம்.
எங்களை கேட்க நாதியில்லை. எங்களை பசி என்ற ஆயுதம் கிழித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாழும் நாடுகளில் எங்களுக்காக குரல் எழுப்புங்கள். எங்கள் துன்பங்களையும், துயரங்களையும் சற்று பாருங்கள்.
உங்கள் குரல்கள்தான் எங்களை மீட்கும். உங்கள் குரல்களை உங்கள் நாட்டு அரசுகளிடமும், மலேசிய தூதரகங்களிடமும் எழுப்புங்கள். உங்கள் குரல்கள் எங்களை உயிருடன் எழுப்பும்.
உறவுகளே, ரத்த சொந்தங்களே எங்களுக்காக குரல் கொடுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், எங்கள் உயிர் போய்க்கொண்டுதான் இருக்கிறது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மரணம் எங்களை நெருங்கி கொண்டுதான் இருக்கிறது. உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வதைப்பட்டு, துன்பப்பட்டு, பாதிக்கப்பட்டு இப்போது இங்கு பசியின் கொடுமையால் மரணத்தை நோக்கி போகிறோம். எங்களுக்காக ஒரு மணிநேரம் செலவிடுங்கள். அந்த ஒரு மணி நேரத்தில் எங்கள் உயிரை காப்பாற்ற குரல் கொடுங்கள். அப்போதுதான் எங்கள் உயிர் காக்கப்படும். எங்கள் உயிரை மீட்கும் பணி உங்களிடம்தான் உள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.