பக்கங்கள்

30 மே 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பை நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் திட்டம்-அரியநேந்திரன்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாலாம் மாடிக்கு கொண்டு சென்று அடைத்து வைப்பதற்கான அரசின் சதித் திட்ட நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகவே கூட்டமைப்பின் தலைவராக நாடு கடந்த தமிழீழஅரசின் முக்கியஸ்தர் வி.உருத்திரகுமார் நியமிக்கப்பட உள்ளார் என்று சிங்களப் பத்திரிகைகளில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இத்தகைய திட்டமிட்ட பிரசாரங்களை நம்பி தமிழ் ஊடகங்கள் அச்செய்திகளைப் பிரசுரிப்பதன் மூலம் தமிழ் சமூகத்தை அச்சத்தில் மூழ்கடித்து விடக் கூடாது என்றும் அவர் கோரினார்.

கூட்டமைப்பின் தலைவராக நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியஸ்தர் வி.உருத்திரகுமார் நியமிக்கப்பட உள்ளார் என்று தெரிவித்து லங்காதீப பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் இணையத் தளச் செய்திச் சேவை ஒன்றும் பிரசுரித்தது. இச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்துக் கருத்துக் கூறிய போதே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் தெரிவித்தவை வருமாறு ”தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்னொருவர் நியமிக்கப்படுவார் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.சம்பந்தர் ஐயாவே தொடர்ந்தும் எமது தலைவராக இருப்பார்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் உள்ளனர். எனவே எமது தலைவராக இருப்பவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்பவராக இருக்க வேண்டும் என்பது இன்னொரு விடயம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் தமிழ்க் கூட்டமைபுக்கும் முடிச்சுப் போட்டு செய்தி பிரசுரித்திருப்பது மலடி மகன் முயற்கொம்பில் ஏறி ஆகாயத் தாமரையைப் பிடுங்கினான் என்பது போன்ற அப்பட்டமான பொய்யே ஆகும்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் கடந்த வாரம் முதல் ஏராளமான தமிழர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ,கூட்டமைப்பு ஆதரவாளர்களையும் கைது செய்கின்ற நடவடிக்கையின் சூழ்ச்சியாகவே கூட்டமைப்பு காண்கின்றது.

இத்தகைய பிரசாரங்கள் மூலம் அரசு எதிர்கால சமாதானப் பேச்சுக்களைக் குழப்பத் திட்டம் இட்டுள்ளது.தமிழ் மக்கள் இது போன்ற செய்திகளால் குழப்பமோ, அச்சமோ அடையத் தேவை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.