பக்கங்கள்

09 ஏப்ரல் 2014

மண்டைதீவில் நடந்த கடத்தல் சம்பவம்!

மண்டைதீவிலிருந்து இளம்பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை பொதுமக்களின் சமயோசிதத்தினால் காவல்த்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கடத்தல் நடந்த அடுத்த சில நிமிடங்களில் கடத்தல்க்காரர்களின் வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு 6ம் வட்டாரத்தில் J-08 கிராமசேவையாளர் வீட்டிற்கு சற்று தொலைவில், சமுர்த்தி உத்தியோகத்தரின் அலுவலகம் உள்ளது. அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீட்டிற்கு நேற்று முன்தினம் மதியம் 12.30 அளவில் ஹை-ஏஸ் வாகனத்தில் வந்திறங்கிய ஐந்து பேரடங்கிய கும்பல் வீட்டிலிருந்த இளம்பெண்ணை கடத்திச் செல்ல முற்பட்டது. வீட்டிலிருந்தவர்களிற்கும் கடத்தல்காரர்களிற்குமிடையிலான இழுபறியை தொடர்ந்து கடத்தல்க்காரர்கள் வீட்டில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் அலறவே, சமுர்த்தி அலுவலகத்தில் இருந்த உத்தியோகத்தர் அங்கு ஓடிச் சென்றுள்ளார். ஆனால் அவரையும் தாக்கி நிலத்தில் விழுத்திவிட்டு, இளம்பெண்ணை வாகனத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு இளைஞர்குழு யாழ்ப்பாண நகரத்திற்கு பறந்தது. நிலத்தில் விழுந்த சமுர்த்தி உத்தியோகத்தர் துரிதகதியில் செயற்பட்டு, விடயத்தை கிராமசேவையாளரிற்கு அறிவித்தார். உடனடியாக தகவல் கிராமசேவகரிடமிருந்து மணடைதீவு சந்தியில் உள்ள காவல்த்துறையினரிற்கு பறந்தது. செய்தி அங்கு செல்லவும், வாகனம் அங்கு வரவும் சரியாக இருந்தது. உடனடியாக வாகனத்தை மடக்கிப்பிடித்த காவல்த்துறையினர், அனைவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்தனர். குறித்த கடத்தல்க்காரர்களின் ஒருவனை தான் காதலிப்பதாகவும், அதற்கு வீட்டில் சம்மதம் கிடைக்காததையடுத்தே அவர்களுடன் செல்ல முடிவெடுத்ததாகவும் கடத்தப்பட்ட பெண் வாக்குமூலமளித்தார். இதனையடுத்து எச்சரிக்கை செய்யப்பட்டவர், தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து வாள்கள், பொல்லுகள், சைக்கிள் செயின்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. கடத்தல்காரக்ள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.