மீண்டுமொரு யுத்தம் உருவாவதை தடுப்பதற்காகவே வடக்கில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கில் மூவின சமூகமும் ஒன்று பட்டு வாழ்வதைப்போன்று வடக்கிலும் மூவின சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீளவும் குடியமர்த்தும் திட்டம் வெற்றிபெற்றுள்ளது. கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். முல்லைத்தீவு பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது முப்பது வருட காலம் இலங்கையில் மிகக் கொடூரமானதொரு யுத்தம் இடம்பெற்றது. இதன்போது வடக்கு மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டனர். எனினும் விடுதலைப் புலி தீவிரவாதிகள் அழிக்கப்பட்ட பின்னர் இன்று வடக்கில் அமைதியும் மகிழ்ச்சியும் நிகழ்கின்றது. எனினும் வடக்கில் மீண்டுமொரு யுத்தம் ஆரம்பமாகி விடக் கூடாது என்பதற்காகவே இன்றும் நாம் இராணுவத்தினரை வைத்துள்ளோம். எனினும் இன்று மிகக் குறைந்த அளவிலான இராணுவத்தினரே வடக்கில் உள்ளனர். இவர்களினால் எவ்வித பாதிப்பும் ஏற்படமாட்டாது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இன்று வடக்கில் இராணுவத்தினர் இருக்கின்றனர்.
அதேபோல் மக்களும் ஜனாதிபதி மீதும் இராணுவத்தினர் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரிக்க வேண்டும். தெற்கில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதைப் போல் வடக்கிலும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இதுவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் விருப்பமாகும்.
மேலும் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களை மீளவும் குடியமர்த்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தும் திட்டத்தின் முதற் கட்டமாக 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டது. தற்போது அதன் இரண்டாம் கட்டமாக 101 வீடுகள் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட குடியமர்த்துவதற்கான சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று அரசாங்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் இப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் இடம் பெயர்ந்த மக்களில் 98% மக்கள் தற்போது அவர்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டுள்ளனர். தவிர்க்க முடியாத சில காரணங்களினாலேயே சிலர் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் இவையும் வெகுவிரைவில் சரி செய்யப்பட்டு காணிகளை அவர்களிடமேயே ஒப்படைக்கும் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். அதே போல் கடந்த கால வடுக்கள் மக்களின் மனதில் மறையாது உள்ளது. எனினும் அவை அனைத்தையும் மறந்து மகிழ்ச்சிகரமானதொரு வாழ்க்கையினை மக்கள் வாழ வேண்டும். இராணுவம் இன்று மக்களுக்கு செய்துவரும் சேவையினையும் பாதுகாப்பினையும் மேலும் தொடர்ந்து செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.