பக்கங்கள்

20 ஏப்ரல் 2014

உண்மை இல்லாத இடத்தில் நல்லிணக்கம் ஏற்படாது!

பொய் உள்ள இடத்தில் உண்மையான அமைதி பிறக்காது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு திருப்பலியினை ஒப்புக்கொடுத்த போது சனிக்கிழமை (19) தெரிவித்தார். நீதி இல்லாத இடத்தில் குழப்பமான சூழ்நிலை ஏற்படும்,உண்மை ஏற்கப்பட்டு நடந்த விடயங்களுக்கு எல்லாம் பொறுப்பு கூறப்படும் பட்சத்திலேயே உண்மையான சமாதானம் பிறந்து நல்லிணக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஒற்றுமை, நல்லிணக்கம் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் எவ்வித பலனும் இல்லை. எமது நாட்டிற்கு மாற்றம் தேவை, அதை உலக நாடுகள் அறிந்திருக்கின்றது. எமக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.ஆனால் அவற்றை எமது நாடு ஏற்றுக்கொள்ளுவதாக இல்லை. இதனால் பல ஆண்டுகளுக்கு பின் நீதி இல்லாமல், உண்மை இல்லாமல் சமாதானம் இன்றி தவித்த மக்களாக எமது இலங்கை நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை நீதியுடன் கூடிய சமாதானமான இந்த செல்வத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வீதி அமைக்கப்படலாம், கட்டடங்கள் கட்டப்படலாம் அவை எங்களுக்குத்தேவை அல்ல. எங்களது உண்மையான தேவை உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் உண்மையான சமாதானத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதேயாகும். கவலைகள், கஸ்டங்கள், வறுமைகள் இருக்கலாம் ஆனால் உண்மையான நீதியுடன் கூடிய சமாதானமே இந்த தவித்த மக்களுக்குத்தேவையாகும்.1920 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இப்படியான ஒரு போராட்டம் இடம் பெற்று வருகின்றது. இதற்கு ஒரு உரிய பதிலை கொடுப்பதற்காக இந்த நாடுகள் எங்களுடன் சேர்நது குரல் கொடுத்து வருகின்றன. சமாதானம் என்பது கடவுளின் உண்மையான கொடை இந்த நாட்டின் சமாதானத்திற்காகவும், எங்களுக்காகவும் கேட்கப்படுகின்ற இந்த மன்றாட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மன்னார் ஆயர் தனது உரையில் தெரிவித்தார். இதே வேளை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்காகவும்,குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் திருப்பலி ஒப்புக்ககொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.