பக்கங்கள்

14 ஏப்ரல் 2014

மினிபஸ் உரிமையாளர் ஒருவர் மீது தாக்குதல்!

நேற்று இரவு 7 மணியளவில் யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக மினிபஸ் உரிமையாளர் ஒருவர் மீதுஇராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் துரைராசா மகேந்திரராசா என்னும் மினிபஸ் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக் கிழமை குறித்த நபர் மினிபஸ்ஸை யாழ்.பிரதான தபால்கந்தோர் முன்பாக செலுத்திய வேளை மதுபோதையில் நின்ற இருவர் வாகனத்தை செலுத்த இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன்; வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. குறித்த கைகலப்பில் ஈடுபட்டவர்கள் சிவில் உடையில் நின்ற இராணுவத்தை சேர்ந்தவர்கள் என மினிபஸ் உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று இரவு பண்ணை மினிபஸ் நிலையத்திற்கு முன்பாக கைகலப்பில் ஈடுபட்ட நபர் உட்பட 10 சிப்பாய்கள் இராணுவ உடையில் சென்று மகேந்திரராசாவை தனியாக அழைத்தனர். பின்னர் அவரிடம் எவ்வித கேள்விகளுமின்றி கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு சென்றனர்;. இதனால் அப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ். பொலிஸாரால் ஒரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.