பக்கங்கள்

28 நவம்பர் 2011

இலங்கை தமிழ் பெண்ணின் உடலிலிருந்து ஏழு கம்பித் துண்டுகள் மீட்பு!

சவுதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற மற்றுமொரு இலங்கைப் பெண்ணின் உடலில் இருந்து 7 கம்பித் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அராப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியான பாலசுப்பிரமணியம் சசிக்கலா என்ற பணிப்பெண்ணை உடல் வருத்தம் எனக் கோரி அவருடைய வீட்டு உரிமையாளர் கடந்த வியாழக்கிழமை தம்மான் மத்திய வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த இளம் யுவதியை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் அவரது உடலில் இருந்து 7 கம்பித் துண்டுகளை மீட்டுள்ளனர்.
குறித்த பெண்ணை பார்வையிட ரியாத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு சவுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளருடைய மனைவி (எஜமானி) தனக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டதாகவும் என்ன நடந்தது எனத் தெரியாது எனவும் இளம் இலங்கைப் பணிப்பெண்ணான சசிக்கலா நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 22ம் திகதி தான் வேலைக்கு வந்தது தொடக்கம் வீட்டு எஜமானி தன்னை தவறாக நடத்தி வருவதாக சசிக்கலா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று காலை விசாரணைக்கென பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் முடிவும்வரை இலங்கைப் பணிப்பெண் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என அராப் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.