பக்கங்கள்

05 நவம்பர் 2011

பிள்ளைகளுடன் சேர்ந்து வாழவென இனி யாரும் கனடாவிற்கு வரமுடியாது!

கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடியேறல்துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார்.
அதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். அதனடிப்படையில், கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடிய வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவைக் கொண்டு ஒரு தடவையில் அவர்கள் 2 வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும்.
வருடாந்தம் 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் வருமானம் ஈட்டுவதுடன் தனியார் மருத்துவ காப்புறுதியையும் கொண்டிருப்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிக்கு மட்டுமே இந்த புதிய விஸா வழங்கப்படும் என்றும் கனேடிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
வருடாந்தம் கனடாவுக்கு வரும் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டியின் எண்ணிக்கையை புதிய நடவடிக்கையின் கீழ் அதிகரிக்கவும் தமது அரசு முடிவு செய்துள்ளதாக ஜேசன் கென்னி தெரிவித்தார்.
கடந்த வருடம் 15,300ஆக இருந்த இந்த எண்ணிக்கை 25,000 வரை உயர்த்தப்படும் என்று அவர் கூறினார். கனடாவில் உள்ள தமது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளுடன் இணைவதற்காக என தற்போது 180,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று கூறும் கனேடிய அதிகாரிகள், அதனைக் குறைப்பதற்காகவே புதிய முறை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.