பக்கங்கள்

04 ஆகஸ்ட் 2013

புலிகளை அழித்தது அல்லா என்றால் பொதுபல சேனாவை உருவாக்கியதும் அல்லாதான்!

விடுதலைப்புலிகளையும், தமிழர்களையும் அழித்தது அல்லாதான் என்றால் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புக்களை அல்லாதான் உருவாக்கினாரா என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாருக் விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என கடந்த 26ம் திகதி பாராளுமன்றத்தில் பேசியது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் விடுதலைப்புலிகளை அல்லாவே அழித்தார் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாருக் அவர்கள் கூறியிருப்பது அவமானமாகவுள்ளது. ஏனெனில் விடுதலைப்புலிகள் யார் அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை நன்றாக தெரிந்தும் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்று கூறுவது தமிழ் மக்களை காயப்படுத்தும் விடயம் என்பதுடன் தமிழ், முஸ்லீம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் கருத்தாகவே உள்ளது. நான் கேட்கின்றேன் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் அதே அல்லாதானே விடுதலைப்புலிகளை அழித்து முஸ்லீம்களுக்கு எதிரான பொதுபல சேனா போன்ற அமைப்புகளை உருவாக்கினார் அவர்களின் ஊடாக பள்ளிவாசல்களை உடைக்கச்செய்தார், பர்தா என்ற முஸ்லீம் கலாசார உடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தச்செய்தார் என்ற கேள்விகளுக்கு ஹீனைஸ் பாருக் அவர்கள் பதிலளிக்க முடியுமா? என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப்புலிகளை அல்லாதான் அழித்தார் என்றால் இலங்கையில் முஸ்லீம்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளையும் அல்லாதான் உருவாக்கினார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே அல்லாவின் பெயரில் அரசியல் நடத்துவதை முதலில் முஸ்லீம் தலைவர்கள் கைவிடவேண்டும். எந்தக்கடவுளும் யாரையும் அழித்து மனிதர்களுக்கு தீங்குசெய்வதில்லை அது அல்லாவாக இருந்தாலும் சரி புத்தர்,ஜெசு,இந்துக் கடவுள்களாக இருந்தாலும் சரி மனிதர்களுக்கு கடவுள் நன்மையையே செய்வார் எனவே இறைவனை வைத்து அரசியல் செய்வதை இவர்கள் கைவிட வேண்டும். அரசாங்கத்தின் வாய்ப்பாட்டை வைத்து அரசியல் செய்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தவிடயமே ஆனால் இவர்கள் இன்னும் தங்களது அரசியல் இலாபத்திற்காக தனது இனத்தையே காட்டிக்கொடுத்து வாழ்கின்றார்கள் என்பதை முஸ்லீம் மக்கள் புரிந்துகொண்டார்கள் என்றால் சரிதான் என அரியநேத்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.