பக்கங்கள்

30 ஜனவரி 2013

தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை: மனோ

தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக இருக்கிறது. 'ஸ்ரீ லங்கா தாயே' என தொடங்கும் தேசிய கீதத்தில் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது 'ஸ்ரீ லங்கா' என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இன்று இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிங்கள, தமிழ் சொற்கள் அடங்கிய ஒரே தேசிய கீதம் என்ற புதிய யோசனையை எனக்கு தெரிய தமிழர்கள் முன்வைக்கவில்லை. அதை முன் வைத்திருப்பது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. அதை இந்த ஜெனீவா மார்ச் மாத காலப்பகுதியில் முன்வைத்து, அமைச்சர் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார். அரசாங்கத்தில் உள்ள தீவிரவாத கட்சிகளும், பொதுபல சேனையும் அவரை திட்டுகின்றன. இது அரசாங்க உள்வீட்டு பிரச்சினை. இன்று நிலவும் ஜெனீவா காய்ச்சல் காரணமாக மூளை கலங்கி போய் கண்டதையும் திட்டித்தீர்க்கும் இவர்களது இந்த வேலைப்பற்றி நாம் ஒன்றும்செய்ய முடியாது என இந்நாட்டில் இன்று பாடப்படும் சிங்கள மொழி தேசிய கீதத்தை ஆனந்த சமரகோன் உருவாக்கினார். அதை பின்பற்றி தமிழ் மொழியில் அதே அர்த்தங்களுடன் பண்டிதர் மு. நல்லதம்பி உருவாக்கினார். இது 1950 இல் நடைபெற்றது. இந்த இரண்டு தேசிய கீதங்களும் ஒரே தாள மெட்டிலும் அமைந்துள்ளன. இன்று பிரிந்து நிற்கும் தமிழ், சிங்களம் பேசும் சமூகங்களை ஐக்கியப்படுத்தும் அற்புதமான கருவி இதுவாகும். இதை புரிந்துகொண்டு செயற்படுவது நாட்டை நேசிப்பவர்களின் கடமையாகும். கனடாவில், 'ஓ, கனடா' என ஆரம்பிக்கும் இரண்டு தேசிய கீதங்கள் ஆங்கில, பிரான்சிய மொழிகளில் உள்ளன. பிரான்சிய மொழியில் முதலில் எழுதப்பட்ட இந்த கீதம் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இது ஒரே நாட்டில், ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் இருப்பதற்கான உதாரணமாகும். தென்னாபிரிக்காவில் தேசிய கீதத்தில் ஆங்கிலம், ஆபிரிக்கான் உட்பட மொத்தம் ஐந்து மொழிகளின் வார்த்தைகள் உள்ளன. இதன்மூலம் அந்த நாட்டின் ஐக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இலங்கையில் ஒரே அர்த்தத்தில், இரு மொழிகளில் தேசிய கீதங்கள் உள்ளன. இதை வேண்டாம் என சொல்லி பிரச்சினையை இவர்கள் முதலில் கிளப்பினார்கள். இவர்கள் கிளப்பிய பிரச்சினைக்கு தீர்வாக இன்று ஒரே கீதத்தில் இரண்டு மொழி வார்த்தைகள் என இவர்களே சொல்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு இன்று தேசிய கீதத்தை விட பெரும் பிரச்சினைகள் உள்ளன. தமிழருக்கு இலங்கை தேசிய உணர்வே மறந்து விட்டது. முஸ்லிம்களும் இன்று இந்த கொடுமையை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள். இருந்தாலும் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே என தொடங்கும் இந்த பாடல் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது இலங்கை என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும். ஜெனீவா காய்ச்சல்: கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையை காட்டித்தான் அரசு, ஐ.நா.வில் பிணை வாங்கி வந்தது. நமது ஐநா தூதுக்குழு, கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்கிறோம் என்றும், உண்மையில் 50 வீதம் அமுல் செய்து விட்டோம் என்றும் ஐ.நா.வில் சொன்னார்கள். அப்படியானால் சரி, மிகுதி 50 வீதத்தையும் அமுல் செய்துவிட்டு அடுத்த மார்ச் மாதம் வாருங்கள் என சொல்லி உலகம் நம்மவர்களை வழியனுப்பி வைத்தது. அன்று சொன்ன அந்த 'அடுத்த மார்ச்' வந்துவிட்டது. இவர்கள் இந்த ஒரு வருடத்தில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகள் எதையும் அமுல் செய்யவில்லை. அது நமக்கு தெரியும். எனவே இந்த முறை அங்கு சென்று எந்த பொய்யை,எப்படி சொல்வது என இந்த அரசாங்கம் முழித்துக்கொண்டு இருக்கிறது. இதுவும் இன்று நமக்கு தெரியும். இந்த ஆணைக்குழு அறிக்கை ஐ.நா ஆணைக்குழு அறிக்கை இல்லை. இது இந்த நாட்டு அரசாங்கம் தயாரித்து உலகத்துக்கு அளித்த அறிக்கையாகும். இதுவே இன்று அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு மறந்துவிட்டது. கடந்தமுறை இன்றைய பிரதம நீதியரசர் மொஹான் பிரிஸ் அரச தூதுக்குழுவில் ஜெனீவா போனார். இந்தமுறை அவருக்கு பதில் சரத் சில்வா போக இருப்பதாக கதை அடிப்படுகிறது. சரத் சில்வா அங்கும், இங்கும் என்று எல்லா இடத்திலும் இருந்தவர். ஆகவே அவர் ஜெனீவாவும் போகட்டும். யார் போனாலும், உண்மை பேச வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் காத்திருக்கிறது. ஏனென்றால் உலகத்துக்கு இன்று உண்மை தெரியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.