பக்கங்கள்

21 செப்டம்பர் 2011

நாட்டுப்பற்றாளர் ஏரம்பு சின்னம்மா அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்!

தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி அவர்களின் தாயார் திருமதி ஏரம்பு சின்னம்மா அவர்கள் 06/09/2011 அன்று காலமானார். அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இது தொடர்பாக விடுக்கும் இரங்கற் செய்தி

அன்பான தமிழ் பேசும் மக்களே,
தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி அவர்களின் தாயார் திருமதி ஏரம்பு சின்னம்மா அவர்கள் 06/09/2011 அன்று காலமானார்.
தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்க்கைத் துணைவியாரைப் பெற்றெடுத்து வளர்த்த பெருமை சின்னம்மா அவர்களைச் சாரும்.
அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களப்பலியான மாவீரன் கப்டன் அருண் (ஏரம்பு பாலச்சந்திரன்) அவர்களின் தாயாருமாவார்.
தேசியத் தலைவரின் பிள்ளைகளான சாள்ஸ் அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரின் தமிழ்த்தேசியப் பற்றுடனான வளர்ச்சியில் சின்னம்மாவின் பங்களிப்பு அளப்பெரியது.
ஆசிரியையாகப் பணிபுரியத் தொடங்கிய காலத்திலிருந்தே தனது கணவர் நாட்டுப்பற்றாளர் ஏரம்பு அவர்களைப் போலவே சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வந்த சின்னம்மா அவர்கள். எமது போராளிகளின் பராமரிப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறையோடு செயற்பட்டவர்.
தாயகத்தை விட்டு வெளியேறி வசிக்கும் வசதிகள் தாராளமாக இருந்தும்கூட எமது மக்களோடு மக்களாகவே வாழ்ந்துவந்த சின்னம்மா அவர்கள், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்கணம்வரை எமது மக்களுடனேயே அத்தனை துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தார்.
எமது இனவிடுதலைப் போராட்டத்தில் பற்றுறுதியோடு தன்னை அர்ப்பணித்து, வெளித்தெரியாமலேயே பல சேவைகளையும் பணிகளையும் செய்து வாழ்ந்து வந்த ஏரம்பு சின்னம்மா அவர்களை ‘நாட்டுப்பற்றாளர்’ என கெளரவப்படுத்துவதில் எமது அமைப்பு பெருமை கொள்கின்றது.
இறுதிநேரம் வரை பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் நாட்டுப்பற்றாளர் சின்னம்மாவின் நலன்பேணலில் அக்கறையோடு செயற்பட்ட அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.