பக்கங்கள்

18 ஆகஸ்ட் 2014

சீமானிடம் சில கேள்விகள்!

வணக்கம்.
"லட்சம் பிரச்சினையோட போராடிகிட்டிருக்கேன், நீ வந்துட்ட கத்தி சுத்தின்னு." என்று சினத்தோடு நீங்கள் சீறிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தவிர்க்க இயலாத சூழலில் சில கேள்விகளை "கோடானுகோடி தம்பி"களில் ஒருவரனாய் எழுப்ப வேண்டி இருக்கிறது.. "நீ யார் என்னை கேள்வி கேட்கிற.. நான் மட்டும்தான் கிடைத்தேனா?" என்று இதற்கும் நீங்கள் சீறிவிட வேண்டாம்...ஏனெனில் நிகழ்வுகள் உங்களைச் சுற்றியதானது.. உங்களுடன் தொடர்புடையது மட்டுமே என்பதால் இக்கேள்விகள்..
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை புலிச் சீருடையிலும் கையில் துப்பாக்கியுமாக புலிப்பார்வை திரைப்படம் சித்தரிப்பதை நீங்கள் அப்படியே முற்று முழுதாக ஏற்கிறீர்களா?
புலிப்பார்வை படமானது பாலச்சந்திரன் உள்ளிட்ட சிறுவர்களுக்கும் ஆயுத பயிற்சி கொடுத்து பிரபாகரன் 'சிறார் போராளி'களை உருவாக்கினார் என்கிறது.. இதைத்தான் சிங்கள பேரினவாதமும் காலம் காலமாக சொல்கிறது.. சிங்களத்தின் கூற்றை அப்பட்டமாக வழிமொழிகிறது புலிப்பார்வை.. இதை நீங்களும் சரி வழிமொழிகிறீர்களா?
வெற்றுடம்பில் சிங்களத் தோட்டாக்களுடன் பாலகன் பாலச்சந்திரன் வீழ்த்தப்பட்டு கிடப்பதுதான் தமிழர் மனங்களில் ஆழப்பதிந்து கிடக்கும் சித்திரம்.. இந்த சித்திரத்தை அகற்றிவிட்டு புலிச்சீருடை பாலச்சந்திரனை திணிப்பது தமிழர் மனங்களின் மீதான சிங்கள உளவியல் யுத்தம் என்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
புலிப்பார்வை இசைவெளியிட்டு விழாவில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை நீங்கள் மேடையில் கண்டிக்காமல் மவுனமாக இருந்தது ஏனோ?. - புலிப்பார்வை திரை இசை வெளியீட்டு விழாவில் முழக்கங்களை மாணவர்கள் எழுப்பியது தவறு என்கிறீர்களா?
ஆனால் நாம் தமிழர் மாணவர் பாசறையானது, மாணவர்களைத் தாக்கியது ஒரு குறிப்பிட்ட கட்சியினர்தான்; அதை வன்மையாக கண்டிக்கிறோம்" என்கிறது.. அப்படியானால் உங்கள் நிலைப்பாடு வேறு.. உங்களது மாணவர் பாசறை அமைப்பின் நிலைப்பாடு வேறா?
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு தடை விதித்த பின்னரும் இலங்கையில் கல்வி நிறுவனங்களை ஒரு தமிழக குழுமம் நடத்துகிறது.. அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.. ஆனால் அந்த குழுமத்தின் தலைவரை நீங்கள் புகழ்கிறீர்களே.. அவரது திரைப்படத் தயாரிப்பான புலிப்பார்வையை ஆதரிக்கிறீர்களே அப்படியானால் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தீர்மானம் தவறு என்கிறீர்களா?
கத்தி திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் உறவினர்களுடன் தொடர்புடையது என்று ஒட்டுமொத்த தமிழகமே கூறுகிற போது எனக்குத் தெரியவே தெரியாது என்று மழுப்புகிறீர்களே.. உங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு நீங்களே கண்ணிவெடி வைத்துக் கொள்கிறீர்கள் என்பது புரியவே இல்லையா?
விஜய்யும், முருகதாஸும் தமிழ்ப்பிள்ளைகள்.. அவர்களது திரைப்படத்தில் தவறு இருந்தால்தான் குரல் கொடுப்பேன் என்கிறீர்களே,, அப்படியானால் தமிழ்ப் பிள்ளைகளான டக்ளஸும் கருணாவும் திரைப்பட நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்காக ஒரு திரைப்படத்தில் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கினால் அதிலும் "கருத்துப் பிழை"யை மட்டும்தான் பார்த்து அண்ணன் நீங்கள் எதிர்ப்பீர்களோ?
லட்சம் பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கும் போது கத்தி, சுத்தி என்று வந்துவிட்டதாக பதவிகளுக்கு வந்துவிடாத நீங்களே சலித்துக் கொள்ளும் போது, அரசியல் மற்றும் அரசு பதவிகளில் ஆண்டாண்டுகாலமாக இருப்பவர்களுக்கு கோடானுகோடி பிரச்சனைகள் இருக்கும் போது அவர்கள் எப்படி கத்தி சுத்தி அல்லது நீங்கள் சொல்கிற ஈழம் போன்ற பிரச்சனைகளுக்கு போராட முன்வருவார்கள்?
அவர்களை மட்டும் நீங்கள் குறைசொல்லி கொந்தளிப்பது சரி அல்லதானே?இத்தனை கேள்விகளை உங்கள் முன் ஏன் வைக்கிறோம் எனில் தமிழகத்தில் இருக்கிற அத்தனை பேரும் துரோகிகள், சந்தர்ப்பவாதிகள்..அதனால்தான் தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள் கட்சி துவங்க வேண்டியதாயிற்று என்று பொதுமேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.. ஒருவேளை உங்களுக்கு முந்தையவர்களுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்பதைப் போல நீங்களும் இருக்கிறீர்களோ என்ற ஐயத்தின் மீது எழுந்த கேள்விகள்தான் இவை.. வேறு ஒன்றும் இல்லை..

இப்படிக்கு
உங்களில் ஒருவன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.