தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் அந்தக் காதல் முறிவடைந்ததால் அதிக மருந்து வில்லைகளை விழுங்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மரணமானவர் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த றொபின்சன் ரவிராஸ் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
தவறான தொலைபேசி அழைப்பு ஒன்றினால் குறித்த இளைஞருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொலைபேசி வாயிலாக அறிமுகம் ஆவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருவரும் சந்திக்காத நிலையில் அந்தப் பெண்ணை குறித்த இளைஞர் காதலித்தார் எனக் கூறப்படுகின்றது.
தொடர்ச்சியாக அந்த இளைஞர் தனது தொலைபேசி மூலமாகவே காதலை வளர்த்து வந்த நிலையில் குறித்த பெண் அந்த இளைஞருடனான உறவை திடீரெனத் துண்டித்தார் எனக் கூறப்படுகின்றது.
இதனால் மனமுடைந்து போன இளைஞர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் தற்கொலைக்கு முயன்றபோதும் உறவினர்கள் அவரைக் காப்பாற்றியதுடன் அவருக்கு அறிவுரைகளும் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த இளைஞர் அளவுக்கு அதிகமான மருந்து வில்லைகளை உட்கொண்டுள்ளார்.
அவரது நடவடிக்கையில் மாற்றத்தை அவதானித்த உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை சேர்ப்பித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த இளைஞர் நேற்றுக் காலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார் எனக் கூறப்படுகின்றது.
யாழில் இது போன்ற காதல் தற்கொலைகள் தற்பொழுது அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.