பக்கங்கள்

25 ஆகஸ்ட் 2014

மன்னாரில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு!

மன்னாரில் இளம்குடும்பஸ்தர்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!தலைமன்னார் வீதியில் எழுத்தூர் சந்திக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான தர்மசீலன் கரிகரன் (வயது 31) என்பவர் என்று அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். இவர் மன்னார் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சாரதியென்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு அருகிலுள்ள தனது உறவினரின் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு இன்று அதிகாலை ஒரு மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பிய அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார் என்றும் அதன் பின்னர் வீட்டிலிருந்து அதிகாலை 4 மணியளவில் தனது பணியிடத்துக்குப் புறப்பட்டார் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தை கண்டு, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மன்னார் பதில் நீதிவான் எம்.சதக்கத்துல்லா சம்பவ இடத்துக்குச் சென்று விசாரனை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். தூக்கிட்ட மரக்கிளை மிகவும் சிறியது என்றும் அது மனித உடலைத் தாங்கக்கூடிய பருமனைக் கொண்டிருக்கவில்லை என்றும், சடலம் முழங்கால் நிலத்தில் முட்டியவாறே காணப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் குறித்த நபரை யாரும் அடித்து கொலை செய்து பின்னர் தூக்கிட்டுள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:மலரும். கொம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.