பக்கங்கள்

05 டிசம்பர் 2012

நன்றாக இருக்கிறேன், விஷமிகளின் வதந்தியை நம்பாதீர் - கருணாநிதி வேண்டுகோள்

எனது உடல் நலம் குறித்து காலையிலிருந்தே விஷமிகள் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தபோது கருணாநிதி கூறுகையில், இன்று காலையிலிருந்து சில விஷமிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு என்னை பற்றி இந்த வதந்திகளை உருவாக்கி இருக்கிறார்கள். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி. காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கு குறித்து அவரிடம் கேள்வி கேட்டபோது, ஒரு மாநில அரசைப் பற்றி அவசரப்பட்டு நான் நான் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. நீண்ட நாட்களாக நான், தமிழகமும், கர்நாடகமும் அண்டை மாநிலங்கள், இந்த இரண்டு மாநிலங்களும் நட்புணர்வோடு இருக்க வேண்டுமே அல்லாமல், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பவன். எனவே உங்கள் கேள்வியின் மூலமாக தமிழக அரசையோ, கர்நாடக அரசையோ நான் இந்தப் பிரச்சினையில் குற்றஞ்சாட்ட விரும்பவில்லை. ஏற்கனவே காவிரி நதி பாய்கின்ற பகுதிகளில் உள்ள மாநிலங்கள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசின் உதவியோடு உருவாக்கியது காவிரி நதி நீர் ஆணையம். அந்த ஆணைத்திற்கு கட்டுப்பட்டுத் தான் காவிரி பாய்கின்ற பகுதிகளிலே உள்ள மாநிலங்கள் எல்லாம் நடக்க வேண்டும். இது அப்போதே எடுத்த முடிவு. அந்த முடிவினை தக்கக் காரணங்கள் இல்லாமல் யாரும் மீறக் கூடாது என்பது என்னுடைய கண்டிப்பான கருத்து என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.