பக்கங்கள்

05 டிசம்பர் 2012

யாழ்,மாணவர்களுக்கு ஆதரவாக கனடிய பல்கலைக்கழகங்களிலும் போராட்டம்!

மாவீரர் நாளான கடந்த நவம்பர் 27ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், விடுதலைக்காகத் தம்முயிரை ஈந்த மாவீரர்களுக்கு விளக்கேற்றியதைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் மீது சிங்கள அரசும் அதன் படைகளும் அடக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றன. மாவீரர் நாளன்று பல்கலைக்கழகத்தினுள் புகுந்து காட்டுமிராண்டித்தனம் புரிந்த படைகள் அடுத்தநாள் அதனைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேரணியின்போதும் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டன. அதனைத் தொடர்ந்து நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். சிங்கள இனவாத அரசின் இந்த அடக்குமுறையினைக் கண்டித்தும் கைதான மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டிருக்கும் படையினரை வெளியேறும்படி தெரிவித்தும் கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களும் ஏனைய இன மாணவர்களும் இணைந்து நேற்று (04-11-2012) போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். யோர்க் பல்கலைக்கழகம், றையர்சன் பல்கலைக்கழகம், ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ் வளாகம், ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகம், ஒட்டாவா - கார்ல்டன் பல்கலைக்கழகம், வோட்டலூ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இப்போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ் மாணவர்களுடன் பெருந்தொகையான பிற இன மாணவர்களும் அவர்களின் மாணவர் அமைப்புகளும் இதிற் கலந்துகொண்டன. யோர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கைதான நான்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய், மாணவர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் நிறுத்து, உடனடியாக யாழ். பல்கலைக்கழக சூழலிலுள்ள படையினரை மீளப்பெறு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அங்கு திரண்டிருந்த மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு பக்கபலமாக தாம் இருப்போம் என்ற செய்தியினையும் தெரிவித்திருந்தனர். ஸ்காபுரோவிலுள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் தமிழ் மாணவர்களுடன் வேறு பல அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தமது ஆதரவினைத் தெரிவித்தனர். இதில் ஸ்காபுரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கலந்துகொண்டிருந்தது. இம்மாணவர் ஒன்றியம் 11,000 மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன்போதும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, தமிழ் மாணவர் மீதான அடக்குமுறைக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல், ரொறன்ரோ நகரின் மத்தியில் அமைந்துள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ் வளாக தமிழ் மாணவர் அமைப்பு அங்குள்ள மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மதியம் 2 மணியளவில் ஓர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது. இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான விளக்குதல்கள் தமிழ் மாணவர்களால் ஏனைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதேபோன்ற போராட்ட நிகழ்வுகளை மேலும் நடத்துவதற்கு இப்பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளதாக நிகழ்வின் முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்திலும், மற்றும் வோட்டர்லூ நகரில் அமைந்துள்ள வோட்டர்லூ பல்கலைக்கழகத்திலும், ரொறன்ரோ நகரின் மத்தியில் அமைந்துள்ள றையர்சன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அங்குள்ள தமிழ் மாணவர் அமைப்புகளால் ஏனைய இன மாணவர் அமைப்புகளை இணைந்து அமைதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறான எழுச்சிப் போராட்ங்கள் மாணவர்களாலும் தமிழ் சமூகத்தினாலும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன எனத் தெரியவருகின்றது. அவ்வகையில் முதலாவது நிகழ்வாக எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று றொரன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக மாலை 3 மணிக்கு எழுச்சிப் பேரணி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.