பக்கங்கள்

05 ஆகஸ்ட் 2012

பச்சிளம் குழந்தைகளைக்கூட படுகொலை செய்த கருணா,பிள்ளையான் கும்பலுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்!

கிழக்கில் பச்சிளம் குழந்தைகள், மனித நேய செயற்பாட்டார்கள், உபவேந்தர், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், என வகைதொகை இன்றி படுகொலைகளை புரிந்த பிள்ளையான் கருணா குழுக்களுக்கு கிழக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிள்ளையான் மற்றும் கருணா குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் ஈவிரக்கமின்றி செய்த படுகொலைகளின் விபரங்களை சுட்டிக்காட்டியுள்ள மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் இந்த கொலைகாரர்களுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என கிழக்கிலங்கை தமிழ் மக்களிடம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிள்ளையான் குழு செய்த படுகொலை
பிள்ளையான்குழுவினர் திருகோணமலையில் 2009 மார்ச் 11ஆம் திகதி 6வயது மாணவியான வர்ஜா யூட்றெஜி என்ற சிறுமியை கடத்திச்சென்று படுகொலை செய்தனர். இச்சிறுமியின் சடலம் பின்னர் மூன்று தினங்களில் சாக்கு ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பிள்ளையான் குழுவைச்சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இக்கொலையை தாங்களே செய்ததாக ஒப்புக்கொண்டனர். இக்கொலையை கிழக்கு முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் உத்தரவின் பேரிலேயே செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
பிள்ளையான் போன்ற மகிந்த ராசபக்சவுக்கு நெருக்கமானவர்கள் இக்கொலையின் பின்னணியில் இருந்த விடயம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இக்கொலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் காவல்துறையினரால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் அக்கொலை வழக்கு விசாரணை மூடப்பட்டு விட்டது.
மட்டக்களப்பில் பச்சிளம் சிறுமி படுகொலை
இதேபோன்று மட்டக்களப்பில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 31ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவியான 8வயதுடைய தினுசிகா சதீஸ்குமார் என்ற மாணவி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். கடத்தி சென்றவர்கள் இவரின் தாயிடம் 30இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியிருந்தனர்.
இம்மாணவின் தந்தையை(சதீஸ்குமார் சந்திரராசா) இதற்கு முன் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணாகுழுவினர் கடத்திச்சென்று படுகொலை செய்திருந்தனர்.
தினுசிகாவின் படுகொலையில் கருணாகுழு பிள்ளையான்குழு இரண்டும் இணைந்தே ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்த படுகொலையாளிகளுக்கு தலைமை தாங்கியவர் புளொட் மோகன்குழுவைச்சேர்ந்த ரதீஸ்குமார் என்பவர் என்றும் இவர் பின்னர் கருணாகுழுவுடன் சேர்ந்து இயங்கி வந்தார். இவர் மட்டக்களப்பு இராணுவ புனலாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த லெப்.கேணல் நிஜாம் முத்தலிப் என்ற இராணுவ அதிகாரிக்கு கீழ் இயங்கி வந்தனர்.  இந்த மாணவியின் கடத்தல் மற்றும் படுகொலைகளில் கருணா பிள்ளையான் குழுக்கள் மட்டுமன்றி சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சிறுமியின் கடத்தல் மற்றும் படுகொலை தொடர்பாக கந்தசாமி ரதீஸ்குமார் என்பவர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த படுகொலையின் பின்னணியில் இருந்தவர்களின் விபரங்கள் அம்பலத்திற்கு வராமல் இருப்பதற்காக இந்த நான்கு பேரும் பின்னர் ஊறணியில் வைத்து காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த சிறுமியின் படுகொலையில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு இருந்தது.
தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் கடத்தி படுகொலை
2006ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவுக்கு கணக்கியல் பயிற்சி ஒன்றிற்காக சென்ற மட்டக்களப்பு தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்களை வெலிக்கந்தையில் வைத்து பிள்ளையான் கருணா குழு ( அப்போது இருதரப்பும் ஒன்றாகவே இருந்தனர்) வெள்ளைவானில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு தமிழர் புனர்வாழ்வு கழக தலைமை கணக்காளர் தனுஷ்கோடி, பிறேமினி, சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராசா வசந்தராசா, கலையாப்பிள்ளை ரவீந்திரன், உட்பட 10பேர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். கடத்தி செல்லப்பட்ட பெண் பணியாளர்கள் பிள்ளையான் உட்பட காடையர் குழுவால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை
இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இக்கடத்தலையும் கொலையையும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் பிரிந்த பின்னர் இக்கடத்தல் குற்றச்சாட்டை இருவரும் ஒருவரை ஒருவர் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கடத்தலுக்கு முதல் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பால சுகுமாரை கடத்தி சென்ற கருணா தலைமையிலான பிள்ளையான் ரவீந்திரநாத் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையும் விடுவித்திருந்தனர்.
இது தவிர கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன், உட்பட பெருந்தொகையான புத்திஜீவிகளையும் கொலைகார ஈனப்பிறவிகளான பிள்ளையானும் கருணாவும் கொலை செய்தனர்.  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தை தேவாலயத்திற்குள் வைத்தே தொழுகையின் போதே படுகொலை செய்ய படுபாதகத்தை செய்தவர்கள் கருணா குழுவினராவார்.
கிழக்கில் பள்ளிவாசல்கள் மீது படுகொலை நடத்திய கருணா
1990ஆம் ஆண்டில் கிழக்கில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் மீது கருணாவின் நேரடி உத்தரவின் பேரில் படுகொலை நடத்தப்பட்டது. பள்ளிவாசல்கள் மீது படுகொலைகளை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்தது கருணாவே அன்றி விடுதலைப்புலிகளின் தலைமை அல்ல. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவது என்ற முடிவை விடுதலைப்புலிகளின் எடுக்கவில்லை என்பதற்கு வடபகுதியில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதும் முஸ்லீம்கள் கொல்லப்படவில்லை என்பதும் சான்றாகும்.
எனவே பச்சிளம் குழந்தைகளை அப்பாவி பொதுமக்களை, புத்திஜீவிகளை படுகொலை செய்த ஈனப்பிறவிகளான கருணா பிள்ளையான் குழுக்களை கிழக்கு மாகாணத்திலிருந்து துரத்துவதற்கு கிழக்கு மாகாணசபை தேர்தலை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இவர்களை தோற்கடிப்பதன் மூலம் கொலைகார ஈனப்பிறவிகளான கருணா பிள்ளையான் ஆகியோருக்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க முடியும் என மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.