பக்கங்கள்

26 ஆகஸ்ட் 2012

சிறிலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்!

சிறிலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார். மனித உரிமை மேம்பாட்டிற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் முகவர் நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம், நவனீதம்பிள்ளை அண்மையில், அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்ததாகவும் அந்த அறிக்கையிலேயே சிறிலங்கா தொடர்பில் மேற்படி குற்றச்சாட்டை நவநீதம்பிள்ளை முன்வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளின் போது சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீர்மானம் நிறைவேற்றிய காலப் பகுதிக்கு முன்னரும், அதன் பின்னரும் இந்த நிலைமை நீடிப்பதாக அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கப்படும் பாரிய அளவிலான அழுத்தம், சுனிலா அபேசேகர, சந்தியா எக்நெலிகொட, நிமால்கா பெர்னாண்டோ போன்றோர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமை குறிப்பாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தமை என்பவை குறித்தும் நவனீதம்பிள்ளை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அல்ஜீரியா, பஹ்ரெய்ன், பெலாரஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஸகஸ்தான், லெபனான், மலாவி, சவூதிஅரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளிலும் மனிதவுரிமைச் செயற்பாடுகள் குறித்தும் அவ் அறிக்கையில் நவிப்பிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.