பக்கங்கள்

04 மார்ச் 2014

படையில் இணைவதை எதிர்த்த இளைஞர்கள் கைது!

தமிழ்ப் பெண்களை மிரட்டியும், மூளைச்சலவை செய்தும் ராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே தொடர்கின்றன. இந்த நடவடிக்கைகளினால் ஏற்படப்போகும் கலாச்சார, சமூக சீர்கேடுகள் மற்றும் இவை எல்லாம் தமிழின அழிப்பின் ஓர் அலகுதான் என்றும் சமூக சிந்தனையுள்ள இனமானமுள்ளோர்கள் கருத்துரை செய்து வருகின்றார்கள், ராணுவ அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கவேண்டும். ஆனால் இவற்றை சிங்கள ராணுவம் தமக்கு எதிரான நடவடிக்கை என சம்பந்தப்பட்ட சமூக நோக்கர்களை மிரட்டியும் கைது செய்தும் வருகின்றது.இன்று புதுக்குடியிருப்பில் மேலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு, உடையார்கட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ராணுவம் நான்கு பேரை கைது செய்துள்ளது. கைதான நால்வரில் ஒருவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. ஏனைய மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது- தேராவில், உடையார்கட்டைச் சேர்ந்த கே.மாடசாமி என்பவரின் இரு பெண்பிள்ளைகள் அண்மையில் இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.இதை அறிந்த அவ்வூர் இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். இராணுவத்தில் தன் இரு பெண்களையும் இணைத்து தமிழினத்துக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று குறித்த குடும்பத்தவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் தன் பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்ததால் தன்னை 4 இளைஞர்கள் அச்சுறுத்தினார்கள் என்று மாடசாமி புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து அந்த 4 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். இதன்போது அவர்களில் ஒருவரைப் பிணையில் விடுவித்த நீதிமன்றம் ஏனைய மூவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இவ்வாறு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தகவலை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.