பக்கங்கள்

13 மார்ச் 2014

கிளிநொச்சியில் பொலிஸ்காரர் காயமடைந்துள்ளாராம்!

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி பகுதியில் ஒரு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. கிளிநொச்சியில், தர்மபுரம் பகுதியில் ஒரு வீட்டை இராணுவத்தினர் சுற்றி வளைத்து, அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை அங்கு தடுத்து வைத்திருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்திருந்தனர். அந்தப் பெண்களை தாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை அறிய முற்பட்டபோது, அவர்களுடன் அங்கிருந்த யாரோ, தன்னை அவர்களுடன் பேச அனுமதிக்கவில்லை என்றும், அவர்கள் தம்மை பொலிஸார் என்று கூறியதாகவும், அங்கு ஒரு விசாரணை நடப்பதாக அவர்கள் கூறியதாகவும், சட்டத்தரணி கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிபிசிக்கு கூறியிருந்தார். இந்த விடயம் குறித்து பொலிஸ்தரப்பு பேச்சாளர் அஜித் ரோகண அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது ஒரு குற்றவியல் சம்பவம் என்று அவர் கூறினார். அந்த வீட்டுக்கு ஒரு கிரிமினல் குற்றவாளியை தேடி பொலிஸார் சென்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அப்போது ஒரு பொலிஸ்காரருக்கு காலில் காயம் ஏற்பட்டு விட்டது என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். காயமடைந்த பொலிஸ்காரர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பதை தன்னால் உடனடியாக கூற முடியாது என்றும் அதனையடுத்து அங்கு பொலிஸார் விசாரணை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தச் சம்பவத்தில் இராணுவத்துக்கு சம்பந்தம் கிடையாது என்றும் அது ஒரு கிரிமினல் சம்பவம் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி:பி.பி.சி.தமிழோசை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.