பக்கங்கள்

30 மார்ச் 2014

குளத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

வவுனியா மாமடு குளத்தில் இன்று காலை மூவர் மூழ்கி பலியாகியுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பாக அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை வவுனியா பிரதேசத்தில் இருந்து நான்கு யுவதிகளும் இரு இளைஞர்களும் மாமடு குளத்தினை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். இவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்தும் சிறிய வள்ளத்தில் ஏறி நீரில் செல்ல முற்பட்டபோது வெள்ளம் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கியுள்ளனர்.எனினும் இவர்களில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் உயிர் தப்பி கரை சேர்ந்த நிலையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் விநாயகபுரத்தை சேர்ந்த என். சங்கீதா 26 வயது, கற்குழியை சேர்ந்த ஜோசப் ஜென்சி 26 வயது, திருநாவற்குளத்தை சேர்ந்த எஸ். உசாந் 20 வயது ஆகியோரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை உயிர் தப்பிய யுவதியொருவர் கருத்து தெரிவிக்கையில்,இன்று காலை வவுனியாவில் இருந்து நானும் மேலும் மூவருமாக நால்வர் பயிற்சி வகுப்பொன்றை நிறைவு செய்துவிட்டு சின்னப்புதுக்குளத்தில் உள்ள நண்பியொருவரை பார்வையிடுவதற்காக வந்திருந்தோம். அவ் வேளையில் குளத்தினை பார்வையிடுவதற்கு விருப்பமாக இருந்தமையினால் சின்னப்புதுக்குளத்தில் உள்ள நண்பியும் அவருடைய தம்பியையும் அழைத்துக்கொண்டு மாமடு குளத்திற்கு சென்ற சமயம் அங்கிருந்த வள்ளத்தில் ஏறி புகைப்படம் எடுத்துவிட்டு சிறிது தூரம் வள்ளதில் நகர முற்பட்டவேளை அது கவிழ்ந்தது.இவ் வேளையில் ஒருவாறாக நாம் மூவர் கரையை சேர்ந்துவிட்ட போதிலும் மற்றையவர்கள் நீரில் மூழ்கி விட்டனர் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.