பக்கங்கள்

14 மார்ச் 2014

ஆசிரியர்களை ஒன்றிணைத்து போராட்டம்!

வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் கடத்தப்பட்டு தற்போது எழும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை கண்டித்து வட மாகாண ஆசிரியர்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டமொன்றினை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.வவுனியா மாங்குளம் பாடசாலையில் கற்பித்த கார்த்திகேசு நிரூபனின் எழும்புக்கூடே முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
போர் முடிவடைந்து 3 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு அவருடைய எழும்புக்கூடு கிடைத்திருப்பதை, இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் ஆசிரியர் கடத்தப்பட்டு எழும்புக்கூடு கிடைக்கும் வரையிலான நிலைமை காணப்படுகின்றது என்றால் அது வட மாகாணத்தில் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. ஆசிரியர் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக 2013 நவம்பர் மாதம் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்திருந்ததோடு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டையும் பதிவு செய்திருந்தோம். அத்துடன் பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் எமக்கு மனித உரிமை ஆணைக்குழு உட்பட யாரும் பதில் கூட அனுப்பவில்லை. இவ்வாறான நிலையிலேயே எழும்புக்கூடு கிடைத்துள்ளது. எனவே வட மாகாணத்தில் சகல ஆசிரியர்களும் ஒன்றினைந்து இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கும் இச் செயலை கண்டித்தும் பாரிய செயற்பாடொன்றினை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.