பக்கங்கள்

22 மார்ச் 2014

வட்டுக்கோட்டை படைகளால் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதி சிங்களப்படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுவருகின்றது. இதனால் அப்பகுதியில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியிலுள்ள வட்டுக்கோட்டை, சங்கரத்தை, மாவடி, மூளாய், பொன்னாலை போன்ற பிரதேசங்களிலேயே சுற்றிவளைப்பு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சோதனை நடவடிக்கைக்காக மக்கள் எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லையென்றும் அவ்வாறு வெளியே செல்பவர்கள் தீவிர சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. கிளிநொச்சி,தருமபுரத்தில் ஜெயக்குமாரியின் வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது பொலிசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய நபர் வட்டுக்கோட்டையில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து அப்பகுதியில் நேற்றிரவு தொடக்கம் சுற்றிவளைத்து தேடுதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தை கேள்வியுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டைப் பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்ததுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.