பக்கங்கள்

11 ஜனவரி 2014

படை முகாமை அகற்றக்கோரி வட்டுக்கோட்டையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பிளாவத்தை கிராமத்திலுள்ள இராணுவ முகாமினை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை இன்றிரவு ஆரம்பித்துள்ளனர். குறித்த படை முகாமினை சேர்ந்த சிப்பாய்கள் அருகாகவுள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த பெண்கள் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இன்றிரவும் அருகாகவுள்ள வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக பெண்கள் வசித்து வரும் வீடுகள் மீதே படைமுகாமில் இருந்து கற்கள் வீசப்பட்டுள்ளன. இதையடுத்து திரண்ட பொதுமக்கள் படைமுகாமை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுமிருந்தது. இதனிடையே சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் ஒன்று திரண்டு வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போதும் பொலிஸார் அம்முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுதலித்துள்ளனர். எனினும் முறுகல் நிலை வலுவடைந்ததையடுத்து தற்போது குறித்த முகாமினைச்சேர்ந்த படையினர் அம்முகாமிலிருந்து வெளியேறி அருகாகவுள்ள பிரதான முகாமான வடலியடைப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அண்மையில் குறித்த முகாமினை சேர்ந்த சிப்பாய்கள் குளித்துக் கொண்டிருந்த கிராமப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்த நிலையில் மக்களது போராட்டத்தையடுத்து அச்சிப்பாய்கள் முகாமிலிருந்து இடமாற்றப்பட்டதுடன் அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.