பக்கங்கள்

17 அக்டோபர் 2014

"ஜெயாவிற்கு பிணை"பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார் சரத்குமார்!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது, தற்போதே தீபாவளியைக் கொண்டாடிய மகிழ்ச்சியை அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். 18 வருடங்களாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பையடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனுத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா. ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்தார். ஜெ.க்கு ஜாமீன்... படப்பிடிப்பில் பட்டாசு வெடித்து ‘தீபாவளி’ கொண்டாடிய சரத்குமார் இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை அறிந்த அதிமுகவினர் மகிழ்ச்சியாக இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது தொடர்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் எம்.எல்.ஏ. இது தொடர்பாக ஜெயா டிவிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் அவர் கூறியதாவது:- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது குறித்து கேள்விப் பட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவர் தடைக் கற்களைத் தகர்த்தெறிந்து மீண்டு வருவார். இத்தகவலை அறிந்து மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நான் தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறேன். இங்கு எல்லாரும் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்திருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சியாக உள்ளனர். பட்டாசுகள் வெடித்து இதனை நாங்கள் கொண்டாடுகிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார். தனது பேச்சிற்கு இடையே படப்பிடிப்புத் தளத்தில் பட்டாசுகள் வெடித்த ஓசையையும் தொலைபேசி வழியாக அவர் கேட்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.