பக்கங்கள்

09 பிப்ரவரி 2014

வைகோவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் மோடி!

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் வாஜ்பாய் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மோடியிடம் வைகோ கேட்டுக்கொண்டார். அதற்கு மோடி, "அப்படியே செய்வோம்" என்று ஏற்று கொண்டுள்ளார். வண்டலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு பின் நேற்று இரவு தனியார் ஹோட்டலில் நரேந்திர மோடியை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது, காலையில் இம்பாலில் பேசிவிட்டு, பகலில் கெளஹாத்தியில் பேசிவிட்டு, மாலையில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் உணர்ச்சிமிக்க உரையாற்றுவது என்பது அனைவராலும் இயலாது. "இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைக் கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சி மிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. இன்று நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்" என்று வைகோ கூறியபோது, "மிகச்சிறந்த பேச்சாளரான நீங்கள் அல்லவா? பாராட்டுகிறீர்கள்" என்றார் மோடி. "இன்றைய பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்து, கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது, நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்" என்று வைகோ கூறியபோது, "தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே" என்றார் மோடி. "தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவதையும், அதைத் தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச் சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்ற தமிழ்நாட்டு கட்சிகள் ஊழல் செய்து அதனால் பலன் பெற்றதைப் பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக்கொள்ளும் மறு வாக்கு எண்ணிக்கை புகழ் அமைச்சர் சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள் ஆகும்" என்றார் வைகோ. "வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. மட்டுமே 250 முதல் 272 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும். நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என்று இதுவரை இருந்த பரிமாணம் மோடி அலையால் இம்முறை உடையும். புதிய மாற்றம் தொடங்கும்" என்று வைகோ கூறியபோது, "நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்" என்றார், மோடி. "லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால், படுகொலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துரோகமும் காரணம் ஆகும். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் கடைபிடித்த அணுகுமுறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும்" என்று வைகோ கூறியதற்கு, "அப்படியே செய்வோம்" என்று கூறினார் மோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.