பக்கங்கள்

27 ஜூன் 2011

ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதான திருட்டுப் பெண்கள்.

4 பெண்கள் கொண்ட கொள்ளைக் கோஷ்டி ஒன்று காரைநகர் சிவன் கோவிலில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த போது சாதாரண பெண்களைப் போன்று வேடமணிந்து கோவிலுக்கு வந்திருந்த பெண்களிடம் இருந்து 18 தங்கச் சங்கிலிகளை அபகரித்திருக்கிறார்கள். புத்தளம் பிரதேச வாசிகளான இந்த 4 பெண்களை ஊர்காவற்றுறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தப் பெண் கொள்ளைக் கோஷ்டி வடக்கில் மாத்திரமன்றி கிழக்கின் இந்து மற்றும் பெளத்த விகாரைகளுக்கும் சென்று பக்தர்கள் குழுமியிருக்கும் இடங்களில் நடமாடி பெண்களின் தங்கச் சங்கிலிகளை தந்திரமாக அபகரிக்கும் கொள்ளைத் தொழிலை புரிந்து வந்ததாக பொலிசார் கூறினார்கள்.
சாதாரண பெண்களைப் போன்று ஆலயங்கள் மற்றும் விகாரைகளுக்குள் நுழையும் இவர்கள் ஒரு சிறிய கத்தரிக்கோலை பயன்படுத்தி பெண்களின் கழுத்திலுள்ள தங்கச் சங்கிலிகளை வெட்டி களவாடுகிறார்கள். இவர்கள் கொள்ளையிட்ட 18 தங்கச் சங்கிலிகளின் நிறை 50 தங்க சவரின்களாகுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பொலிசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்ற மற்றைய இரு பெண்களையும் பொலிசார் நாடெங்கிலும் தேடி வலைவிரித்துள்ளார்கள். ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி கயான் பிரசன்னவும், குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் சில்வாவும் இது சம்பந்தமான விசாரணைகளை இப்போது மேற்கொண்டு வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.