பக்கங்கள்

14 ஜூலை 2012

சுவிசிலிருந்து வந்த குடும்பத்தினருக்கு மயக்கமருந்து கொடுத்து நகைகள் கொள்ளை!

சுவிஸிலிருந்து வந்து கொழும்பின் வெள்ளவத்தையிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த தமிழ் குடும்பமொன்றுடன் நெருங்கி பழகிய நபர் ஒருவர் அவர்களை ஏமாற்றி உணவில் மயக்க மருந்தினை கலந்து கொடுத்து தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் பலவற்றை கொள்ளையிட்டு சென்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வெள்ளவத்தை, தயாவீதி பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் கடந்த வாரம் தங்கியிருந்த தமிழ் குடும்பமொன்றிற்கே இந்த நிலை வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பமொன்று கடந்த வாரம் இலங்கை வந்துள்ளது. இவ்வாறு இலங்கை வந்த அவர்களில் இரு ஆண்கள் இரு பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்கியிருந்தனர். குறித்த குடும்பத்தினர் யாழ்ப்பாணம் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததுடன் வெள்ளவத்தை பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தனர். அதன்போது அவர்கள் தங்கியிருந்த அதே விடுதியில் தங்கியிருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு நபர் அக்குடும்பத்தாருடன் மிகவும் நெருக்கமாக பழகியதுடன் அடுத்த நாள் அவர்களுடன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணம் செல்லும் போது கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கு இடையில் உணவு உட்கொள்வதற்காக வான் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்போது 55 வயதுடைய அந்த நபர் குறித்த தமிழ் குடும்பத்தாருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். உணவில் மயக்க மருந்து கலந்திருந்தமை தெரியாத அவர்கள் உணவருந்திய சில நிமிடங்களில் வானிற்குள் மயங்கியுள்ளனர். அதன்போது அச்சந்தேக நபர் அவர்களிடமிருந்த 5 பவுண் நிறையுடைய இரு தங்க சங்கிலிகள், ஒரு பவுண் நிறையுடைய மோதிரம் மற்றும் 450 சுவிஸ் பிராங், 500 அமெரிக்க டொலர்கள் போன்றவற்றை களவாடிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார். குறித்த சந்தேகநபர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர் ௭னவும், அவர் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுவதற்காக இந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையில் ௭வரும் கைது செய்ததாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.