பக்கங்கள்

27 ஜூலை 2012

கனேடியப் பிரஜை ஒருவர் வெள்ளைவானில் கொண்டு செல்லப்பட்டார்!

கைது
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த கனடா பிரஜையான தமிழர் ஒருவரை கொழும்பில் இருந்து வந்த குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: கடந்த 25 வருடங்களாக கனடாவில் வசித்துவந்த இலங்கைத் தமிழரான நடராஜா ஜெயகாந்தன் என்பவர் இருவாரங்களுக்கு முன்னர் தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார். கடந்த பத்து நாள்களாக நெல்லியடி வதிரியிலுள்ள தனது உறவினர் வீட்டில் இவர் தங்கியிருந்தார்.நேற்று மாலை இவரது வீட்டுக்கு திடீரென வெள்ளை வானில் சிலர் வந்து இறங்கினர். தம்மை கொழும்பிலிருந்து வந்துள்ள குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் ஜெயகாந்தனை கைது செய்தனர். எனினும் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும், விசாரணைகளின் பின்னர் அவரை விரைவில் விடுவிப்பதாகவும் கூறி ஜெயகாந்தனை அவர்கள் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர். ஜெயகாந்தன் கைது தொடர்பாக அவரது உறவினர்களிடம் “பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அழைத்துச்சென்று விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக” தெரிவிக்கும் சிட்டை ஒன்றையும் அவர்கள் வழங்கி உள்ளனர் என்று கைதானவரின் உறவினர்கள் தெரிவித்தனர். கொழும்பிலுள்ள பொலிஸ் பேச்சாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது உத்தியோகபூர்வமாக இது தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.