பக்கங்கள்

08 ஜூலை 2012

அரசியல் கைதிகள் விடயத்தில் சர்வதேசத் தலையீடு அவசியம்.

கணேசன் நிமலரூபன் மரணத்தை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு, நீர்கொழும்பு, மஹர, யாழ்ப்பாணம், அனுராதபுரம், கண்டி, களுத்துறை ஆகிய அனைத்து சிறைச்சாலைகளிலும் பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்குச் சமாந்திரமாக, இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு அரசுக்கு அழுத்தம் வழங்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பு குழு அமைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன், இலங்கையிலுள்ள அனைத்துச் சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கும் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார். சர்வதேச சமூக பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: மக்கள் கண்காணிப்பு குழுவின் அவசர வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மிக குறைந்த கால அவகாசத்தில் கடந்த 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நமது கலந்துரையாடலில் கலந்துகொண்டமைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொல்லப்பட்டுள்ள நிமலரூபன் தொடர்பில் நாம் ஏற்கனவே மூன்று முக்கிய கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளோம். அது தொடர்பில் உங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் பிரச்சினை நிமலரூபனின் பிரச்சினையுடன் முடிந்துபோய் விடவில்லை. உண்மையில் இந்த பிரச்சினையுடன் அது பூதாகாரமாக எழுந்துள்ளது. ஏனைய அரசியல் கைதிகள் தொடர்பிலும், இந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பிலும் நாம் அரசுக்கு மேலும் சில கோரிக்கைகளை எழுத்து மூலம் முன் வைத்துள்ளோம். அவற்றையும் மக்கள் கண்காணிப்பு குழு உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறது. அவை தொடர்பில் அரசுக்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து, இந்தப் பிரச்சினை நிரந்தரமாக முடிவுக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். வவுனியாவிலிருந்து முதலில் அனுரதபுரத்துக்கும் பின்னர் மஹர, கண்டி சிறைச்சாலைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கைதிகள் அனைவரும், உடனடியாக கொழும்புக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் எக்காரணம் கொண்டும் மீண்டும் அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்படக்கூடாது. வவுனியா சிறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட அனைத்துக் கைதிகளும், பக்கச் சார்பற்ற முறையில் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவேண்டும். அவர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். அனைத்துக் கைதிகளையும் அவர்களது பெற்றோர்களும், சட்டத்தரணிகளும் சந்திப்பதற்கு முழுமையான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். சிறைகூடங்களிலும், தடுப்பு முகாமிலும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் தற்போது பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் உடனடியாக பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.