பக்கங்கள்

04 ஜூலை 2012

குழந்தைகளுடன் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற ஈழப்பெண்!


சென்னை புழல் பொலிஸ் நிலையம் முன்பாக் பெண் ஒருவரும், 3 குழந்தைகளும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ மூட்டித் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, புழல் சிறைச்சாலை அருகில் காவாங்கரை இலங்கைத் தமிழர் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் நீண்ட காலமாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வரும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வெள்ளை வாகனத்தில் வந்த பொலிஸார் அங்கிருந்து 6 இளைஞர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டும், அந்த இளைஞர்கள் வைத்திருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களையும் தங்களது வாகனத்தில் எடுத்துக் கொண்டும் சென்று விட்டதாகக் தெரிவிக்கப்பட்டது. சுரேஷ் குமார்(3 பெண் குழந்தைகளின் தந்தை), ரமேஷ் (திருமணமாகாதவர்), உமேஸ் (திருமணமாகாதவர்), சுயா (திருமணமாகாதவர்) சுதர்சன் (திருமணமானவர், மனைவியும் ஒரு மகளும் இலங்கையில் உள்ளனர்), சுரேஷ் (திருமணமாகாதவர்) ஆகியோரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களாவர். இந்தச் செய்தி காவாங்கரை முகாமில் உள்ளவர்களுக்குத் தெரிய வர புழல் பொலிஸ் நிலையம் முன்பு சுரேஷ் குமாரின் மனைவியும், அவரது 3 பெண் குழந்தைகளும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக முகாம் வாசிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் வலுக்கவே, முகாமிலிருந்து 6 இளைஞர்களையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றதை ஒப்புக் கொண்டதுடன், 4 இளைஞர்களை விசாரணைக்குப் பின்பு விடுதலை செய்வதாகப் பொலிஸார் உறுதியளித்தனர். அதன்படி சுரேஷ் குமார், உமேஸ், சுயா, சுரேஷ் ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கிடையே, பொலிஸார் விசாரணையில் ரமேஷ், சுதர்சன் ஆகிய இருவரும் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை கேரளா வழியே ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்பப் பணம் பெற்றுக் கொண்டதை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.