பக்கங்கள்

12 ஜூலை 2012

நிமலரூபன் கொலைவிடயத்தில் அரசு ஐநாவிடம் தப்பமுடியாது",சம்பந்தர் சொல்கிறார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் மீளாய்வுக் கூட்டம் ஒன்று எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வவுனியா தமிழ்க்கைதி நிமலரூபனின் கொலை குறித்து அரசு பொறுப்பான பதிலை வழங்க வேண்டிய நிலை ஏற்படும். இதிலிருந்து அரசு ஒருபோதும் தப்பமுடியாது. அந்த அளவுக்கு சிக்கலில் மாட்டியிருக்கிறது மஹிந்த அரசு. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். திருகோணமலை சாந்தி புரம் கிராமத்தில் நேற்று நண்பகல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே சம்பந்தன் இப்படித் தெரிவித்தார். சர்வதேச சமூகத்திடம் இருந்து இலங்கை அரசு எதிர்நோக்கும் கடும் அழுத்தம் மற்றும் தமிழ்க் கைதியின் கொலை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டு நிலைமை குறித்து சம்பந்தன் தனதுரையில் விளக்கினார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது: இனியும் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது என்பது இலங்கை அரசுக்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் இலங்கை அரசு சிக்கியுள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலை முன்கூட்டியே நடத்தி, கிழக்கு மக்கள் தம்மோடு தான் இருக்கின்றார்கள் என்று காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்றும் அதன் மூலம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மஹிந்த ராஜபக்க்ஷ் அரசு நினைக்கின்றது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானம் மற்றும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஆகியன குறித்துக் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய காலம் இலங்கை அரசுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாத நிலை ஏற்படும். சரியான நடவடிக்கைகளை அரசு எடுக்காவிடில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் கொமும்பு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ்வையும் அவரின் இரண்டு சகோதரர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பரதூரமான விளக்கம் ஒன்று அவர்களுக்கு மேனன் அளித்தார். தரப்பட்ட உறுதிமொழிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில் எம்மீது குறை சொல்லாதீர்கள் என்ற கருத்துப்பட சிவ்சங்கர் மேனன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் என்னுடனும் உரையாடினார். இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என அரசு கூறிவருகின்ற போதிலும் ராஜதந்திர நகர்வுகளில் இடம்பெறும் எல்லாவற்றையும் வெளியே கசிய விட முடியாதுஎன்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.