பக்கங்கள்

17 அக்டோபர் 2010

கப்பம் பெற வந்த படையதிகாரி மடக்கிப்பிடிப்பு!

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல தங்க நகை வியாபாரி ஒருவரை கடத்தி 50 மில்லியன் ரூபாய் கப்பம் கோரிய இராணுவ மேஜர் உட்பட மூவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டனர்.
இவ்வர்த்தகரையும், மகனையும் கடந்த புதன்கிழமை இக்கும்பல் கடத்தியது. மகனைப் பாடசாலைக்கு இவ்வர்த்தகர் வாகனத்தில் கொண்டு சென்று கொண்டிருந்தபோது கடத்தல் இடம்பெற்றது.
ஆனால் மகனைப் பின்னர் விடுவித்தனர். 50 மில்லியன் ரூபாயை கப்பமாக தந்து விட்டு செல்லலாம் என்று வர்த்தகருக்கு கூறினர். கப்பம் பணத்தை எடுத்து வர வேண்டும் என்று குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும் என்றனர்.
ஆனால் அவ்வளவு பணத்தை திரட்ட குடும்பத்தினரால் முடியாது என்றும் அவரை விடுவிக்கும் பட்சத்தில் பணத்தை ஒழுங்கி பண்ணித் தந்து விடுவார் என்று வர்த்தகர் இக்கடத்தல்காரர்களுக்கு கூறி இருக்கின்றார். வாக்குறுதி வழங்கி இருக்கின்றார்.
நம்பிக்கையின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் நேற்று இவரை விடுவித்தனர். இக்கடத்தல் குறித்து பொலிஸுக்கோ, வெளியாட்களுக்கோ சொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தும் இருந்தனர். விடுதலையான வர்த்தகர் இன்று பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து கடத்தல்காரர்களுடன் தொலைபேசியில் பேசினார்.
வைத்தியசாலையின் மேல்மாடிக்கு வந்து பணத்தைப் பெற்றுச் செல்லலாம் என்று கூறி இருக்கின்றார். மேஜர் உட்பட ஐவர் வந்தனர். இருவர் வைத்தியசாலையில் வாசலில் நின்றனர். இருவர் மின்சார படிக்கட்டு வாசலில் நின்றனர்.
மேஜர் மாடிக்கு சென்று பணத்தைப் பெற்றுக் கொண்டார். சிவில் உடையில் தயாராக நின்ற பொலிஸார் மேஜரைப் பிடித்துக் கொண்டனர். மின்சார படிக்கட்டின் வாசலில் நின்ற இருவரும்கூட பொலிஸாரிடம் பிடிபட்டனர்.
ஆனால் வாகனத்தில் வெளியே காத்திருந்த இருவர் தப்பிச் சென்று விட்டனர். தப்பிச் சென்றவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய பொலிஸார் உடன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவ்வர்த்தகரை முன்னரும் கடத்தி இருக்கின்றனர். அப்போது 20 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்று இருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.