பக்கங்கள்

23 மார்ச் 2012

தமிழீழம் உருவாகும்வரை போராட்டமும் இருக்கும் என்கிறார் கருணாநிதி.

‘தமிழீழம்’ என்பது தனது நனவாகாத கனவு எனவும் தமிழீழம் உருவாகும்வரை அதற்கான தனது போராட்டமும் இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் குறித்து அவர் கூறுகையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் நாடுகள் வாக்களித்திருக்கின்றன. இது தொடர்பான கருத்தை மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ‘போர்க்குற்றங்கள்’ என்ற வார்த்தைகள் இருந்ததாகவும் பின்னர் அது எடுக்கப்பட்டுவிட்டதாகவும் யாரும் இதுவரை சொல்லவில்லை. அது உண்மையாக இருந்தால் அது தொடர்பான திருத்தங்கள் வருவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்றார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு: இப்போது கொடுத்த அழுத்தத்தைப் போலவே 3 ஆண்டுகளுக்கு முன்பும் மத்திய அரசுக்குக் கொடுத்தோம். ஆனால் அந்தக் கருத்துகள் யார் யாரால் பாழ்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மை எனவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் தமழீழம் உருவாகுவதற்கான சாத்தியமுள்ளதா?என செய்தியாளர்கள் கேட்டபோது. தன்னைப்பொறுத்தவரை அதுதான் இலக்கு என்றார். கடந்த காலத்திலும் தனது நிறைவேறாத கனவு குறித்து கேட்டபோதேல்லாம் தமிழீழம் என பதிலளித்தாக கருணாநிதி கூறினார்.
சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து.
பிரபாகரன் போராட்டம்: ‘புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம் என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு கருணாநிதி ‘பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி மட்டுமே கூறவில்லை.
ஆனால் பிரபாகரனும் முகுந்தனும் பத்நாபாவும் ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் ரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது என்று வேண்டுகிறேன்’ என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.