பக்கங்கள்

18 மார்ச் 2012

ரணிலை திக்குமுக்காட வைத்த யாழ் மக்கள்!

அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழ்ப்பாண மக்கள் முன்வைத்த கேள்வியால் அவர் ஆடிப்போனார். இரண்டு இடங்களில் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு ஒரு இடத்தில் பதிலளிக்காமல் தவிர்த்தார். மற்றொரு இடத்தில் மழுப்பலான பதிலை வழங்கினார்.
நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழு நேற்று யாழ்ப்பாணத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தது. மாதகலில் இடம் பெற்ற சந்திப்பில், ஜனாதிபதியானால் தமிழ் மக்களுக்கு ரணில் வழங்கவுள்ள தீர்வு என்ன என்று மக்கள் கேள்வி எழுப்பினர். "நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானால் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வை வழங்குவீர்கள்?" என்று அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்த ரணில் விக்கிரமசிங்க �இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைத் தருவோம்� என்றார். அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க முன்றலில் பொதுமக்களுடன் ரணில் நடத்திய சந்திப்பின்போதும் தமிழ் மக்கள் இதே கேள்வியை எழுப்பினர். பதிலளித்த ரணில், "2005ம் ஆண்டு நான் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தபோது பிரபாகரனும் அவருடன் இணைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் அதனை எதிர்த்தனர்" என்றார்.
இந்தப் பதிலில் திருப்தி கொள்ளாத மக்கள் "எதிர்காலத்தில் நீங்கள் என்ன தீர்வை முன்வைப்பீர்கள் என்பதைச் சொல்லுங்கள்" என்று அழுத்தம் கொடுத்தனர். நழுவ முடியாத நிலையில், மழுப்பலான பதிலை வழங்கினார் ரணில். "நான் கொள்கை அடிப்படையில் பணியாற்றுபவன். என் மீது நம்பிக்கை வையுங்கள்" என்றார் அவர்.
2005ம் ஆண்டு தான் முன்வைத்த தீர்வுத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டிருந்தால் அதன் பின்னர் இவ்வளவு பெரிய போர் ஒன்று ஏற்பட்டிருக்கமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் 2005ம் ஆண்டில் ஒஸ்லோ உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான சுயாட்சி வழங்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக எதனையும் சொல்லவில்லை என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"இலங்கையின் இரு பெரும் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்தவே முனைகின்றன. தமிழ் மக்களுக்கு நீதியான நிரந்தரத் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கான உளச்சுத்தியை அவை இதுவரை வெளிக்காட்டியதில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் தமிழர்கள் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு காய் நகர்த்துவதே ராஜதந்திரத் தேவையாகவும் உள்ளது" என்றார் அந்த அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.