பக்கங்கள்

09 ஜூன் 2012

படையினருக்கு காணி கொடுப்பதில்லையென தீர்மானம்!


வலிவடக்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான 10 பரப்புக்காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரியிருந்த நிலையில் அந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என சபையின் நேற்றைய விசேட கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
சாலம்பை கலட்டியில் உள்ள 10 பரப்புடைய பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை படையினர் தமக்கு வழங்குமாறு கோரி சபைத் தவிசாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர் .
14 ஆவது கெமுனு ஜோச் படைப்பிரிவினரே குறித்த காணியைத் தமக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பியிருந்தனர். குறித்த காணி தனிநபருக்கு சொந்தமானது எனவும் அவர் அதனை படைத்தரப்புக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்து மாவட்ட விலைமதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே குறித்த காணி பிரதேச சபைக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தக் காணியை தமக்கு வழங்குவதற்கு அனுமதிக் கடிதம் வழங்குமாறு ஆர்.எம்.கே.பதுகே எனும் மேஜர் தர இராணுவ அதிகாரி ஒருவரின் கையெழுத்துடன் இந்தக் கடிதம் அனுப்பபட்டிருந்தது.
இந்தக் கடிதத்துக்கு ஏற்ப காணியை பகிர்வதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கூட்டம் வலி வடக்கு பிரதேச சபையில் நேற்று இடம்பெற்றது.
இதில் உறுப்பினர்கள் ஏகமனதாக 1971 ஆம் ஆண்டில் எமக்கு தரப்பட்ட காணி அப்போதைய சூழ்நிலையில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாமல் போய்விட்டது. 
குறித்த காணியை சுற்றியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்ததும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் எனவே அந்தக் காணியை வழங்குவதில்லை என்று தீர்மானித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.