பக்கங்கள்

03 ஜூன் 2012

லெப்.கேணல்,கெளசல்யனின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் படுகொலை!

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் லெ.கேணல் கௌசல்யனின் மெய்க்காவலராகப் பணியாற்றியவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டியில் முன்னணி பாடசாலை ஒன்றுக்கு வெளியே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவரின் சடலத்தை அவரது தந்தை நேற்று அடையாளம் காட்டியுள்ளார். மட்டக்களப்பு, கல்லாறைச் சேர்ந்த 38 வயதான கணபதிப்பிள்ளை உதயகாந்தன் என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யனின் மெய்காவலராக 2000ம் ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டு வரை பணியாற்றியவராவார். இதன்பின்னர் பிரித்தானியாவுக்குச் சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கொழும்பு திரும்பிய இவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் இவரது சடலம் பம்பலப்பிட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த லெப்.கேணல் கௌசல்யன் கருணா குழுவினரால், வெலிக்கந்தையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.