பக்கங்கள்

04 ஜனவரி 2018

தான் மட்டுமே படித்தவன் என சுமந்திரன் நினைக்கிறார்!-சுரேஷ்

தமிழ் மக்களுக்கு படிப்பறிவில்லை, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு படிப்பறிவில்லை, ஊடகவியலாளர்களுக்கு படிப்பறிவில்லை, நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு படிப்பறிவில்லை, நான் மட்டுமே படித்தவன், மேதை என்னும் தோரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியிலமைப்பு இடைக்கால அறிக்கை பற்றி பேசிக் கொள்கின்றார். மேற்கண்டவாறு தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுரேஷ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், புதிய அர சியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால் அதனை எவரும் படிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார். அவருடைய கருத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் படிப்பறிவில்லாதவர்கள், சிவில் சமூகத்தினர்படிப்பறிவில்லாதவர்கள், மக்கள் படிப்பறிவில்லாதவர்கள், முதலமைச்சர் நீதியரசர் சீ.வி. விக்னேஷ்வரன் படிப்பறிவில்லாதவர் ஒட்டுமொத்தத்தில் நாங்கள் அனைவரும் அடி முட்டாள்கள் தான் மட்டுமே படித்தவன், மேதை என்பதே அதன் பொருள். இதனை விட அவ ர் கூறுகிறார் சமஷ்டி பெயர் பலகை இல்லை. ஆனால் சமஷ்டி இருக்கிறது. நன்றாக புகுந்து பார்க்கவேண்டுமாம். சுமந்திரன் மக்களை எந்த நிலையில் வைத்து பார்க்கிறார் என்பதற்கு இது சிறந்த உதாரணம். வடகிழக்கு இணைப்பை பற்றி பேசுகிறார். அதாவது வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் கூறப்பட்டுள்ளதாம். அதுதான் வடகிழக்கு இணைப்புக்கான வழி. ஜனாதிபதியும், பிரதமரும் மிக தெளிவாக சொல்கிறார்கள். வடகிழக்கு இணைப்பு தொடர்பாக 73 தடவைகள் கூடிய வழிகாட்டல் குழுவில் ஒன்றுமே பேசப்படவில்லையென. ஆனால் வடகிழக்கு இணைப்புக்கு 3 யோசனைகள் உள்ளதாம் சுமந்திரன் சொல் கிறார். எனவே மக்கள் தீர்மானிக்கவேண்டும் இங்கே ஜனாதிபதி பிரதமர் பொய்யர்களா ? சுமந்திரன் பொய்யனா? என்பதை. எங்கள் பார்வையின் படி ஜனாதிபதியும் பிரதமரும்தங்கள் மக்களுக்கு உண்மை சொல்கிறார்கள். தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தமது மக்களுக்கு பொய்யை மட்டுமே சொல்கிறார்கள். நாங்கள் சொன்னோம் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடகிழக்கு இணைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா சென்று அரசிடம் கேளுங்கள். அரசு கேட்காவிட்டாலும் அங்குள்ள ஊடகங்கள் கேட்கும் அதன் ஊடாக இந்தியாக கேட்கும் இந்தியாக கேட்டால் இலங்கை அரசு அதனை கேட்கும் என சொன்னோம். அதற்கு சம்மந்தன் எமக்கு சொன்ன பதில் சிங்கள மக்களை பகைத்து கொண்டு நான் இந்தியா செல்லமாட்டேன் என்பதே. இந்த லட்சணத்தில் சுமந்திரன் எங்களை கேட்கிறார் முடிந்தால் வடகிழக்கை இணைத்து காட்டுங்கள் பார்ப்போமாம். இதனை விட மோசமான பேச்சு புதிய அரசியலமைப்பு உருவாக்க பணியில் அரைவாசி தூரம் பயணித்து விட்டார்களாம். அரைவாசி தூரம் பயணித்து என்ன சாதித்தீர்கள்? கொழும்பு-07ல் உல்லாச பங்களா, எஸ்.ரி.எப் பாதுகாப்பு. பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை, இதுதான் சாதித்தது. மக்கள் இதனால் அடைந்த பயன் ஒன்றுமில்லை. எனவே மக்கள் இந்த தடவை மாற்றம் ஒன்றை நிச்சயமாக கொண்டுவரவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.