பக்கங்கள்

18 ஜனவரி 2018

எம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடி 11ம் திகதி-மணிவண்ணன்!

தமிழ்த் தேசியப் பேரவையைத் தோற்கடிப்பதற்காக அரச இயந்திரம் முழுமையாக களமிறக்கப்பட்டுள்ளது. தேர்தல் திணைக்கள அதிகாரிகளே எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளரும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணம் இளைங்கலைஞர் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாரோ ஒரு தரப்பு தோற்றுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே அரச இயந்திரம் எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை காலமும் வென்று கொண்டிருந்த ஒரு தரப்பு அரசுக்குத் தேவையான தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பாக இருக்கின்றது. அரசைக் காப்பாற்றுகின்ற ஒரு தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால்தான் நேற்று நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்துக்குக் கூட தடை விதிக்கப்பட்டது. அரச இயந்திரத்தையும் பொலிஸாரையும் கொண்டு சட்டத்தை மீறாத எங்களது தேர்தல் பிரச்சாரங்களின் மீது தடையை ஏற்படுத்தி நாங்கள் தேர்தல் பிரச்சாரங்களை விட்டு நீதிமன்றங்களிலே காலத்தைச் செலுத்த வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களை உருவாக்குகின்ற செயற்பாட்டில் அரசாங்கமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற ரத்னஜீவன் எச்.ஹூல் என்பவர் இதுவரை முறைப்பாடு செய்த ஒரே கட்சி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சார்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதிய ஒருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஆக்கியிருக்கின்றார்கள். அவருடைய முழுநேரப் பணி எங்களுடைய கட்சி என்ன செய்கின்றது, அதனை எவ்வாறு தடுக்கவேண்டும் என்பதுதான். எங்கள் மீது பெப்ரவரி 10 ஆம் திகதிவரை நீங்கள் தாக்குதலை நடத்துங்கள். 11 ஆம் திகதி உங்கள் மீது தாக்குதல் தொடங்கப்படும். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருங்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.