பக்கங்கள்

10 மே 2014

ஊடகவியலாளரை தாக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்!

யாழ். ஊடகவியலாளர்கள் மீது வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் வைத்து இனம்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட சம்பவம் குறித்து ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ். கோவில் வீதியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்திய வெளிவிவகார உயரதிகாரி சுஜித்ரா துரை உள்ளிட்ட அந்நாட்டு உயரதிகாரிகள் குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இந்தச்சந்திப்பு குறித்து செய்தி சேகரிக்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் கொழும்பைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்திருந்தனர். இந்நிலையில் முதலமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அதிகாரிகள் குழுவினருக்குமான சந்திப்பு முடிவுற்றதும் முதலமைச்சரின் வாசஸ்தலத்திலிருந்து வெளியில் வந்த குழுவினரை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது அங்கு சிவில் உடையில் திடீரென பிரசன்னமான நபர் ஒருவர் பொலிஸார் முன்னிலையில் ஊடகவியலாளர்களை மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தியதோடு அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். இதேவேளை ஊடகவியலாளர் ஒருவரின் புகைப்படக்கருவியும் சேதத்திற்குள்ளானது. அத்தோடு ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்த குறித்த ஊடகவியலாளர்களை திடீரென தள்ளியதில் அவர்கள் நிலைகுலைந்து போனர்கள். இதேவேளை மேற்படிச் சம்பவமானது சாதாரணமானது (சின்னப் பிரச்சினை) என்றும் ஊடகவியலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற முயற்சித்து அநாகரிகமாக நடந்து கொண்டநபர் முதலமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்றும் கொழும்பிலிருந்து தற்போதுதான் வந்துள்ளார் என்றும் முதலமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் மன்மதராஜா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதேவேளை மேற்படிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் சார்பில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.