பக்கங்கள்

21 நவம்பர் 2021

கனடா கூட்டத்தில் பதற்றம் பொலிஸ் பாதுகாப்புடன் தப்பினார் சுமந்திரன்!

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்க பயணத்தை அடுத்து. கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டுள்ளார். இவர்கள் நேற்று கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கலந்துரையாடல் நடக்கும் மண்டபத்துக்கு வெளியே நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து,45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன்,குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து சுமந்திரனை அங்கிருந்து வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சுமந்திரனை பொலிசாரின் பாதுகாப்புடன், மண்டபத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.