பக்கங்கள்

10 பிப்ரவரி 2021

சுமந்திரனின் உரை தொடர்பில் கஜேந்திரகுமார் கண்டனம்!

பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்றுமாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஐந்து நாட்களாக சுமார் ஒரு இலட்சம் மக்களின் பங்களிப்புடன் – இறுதிநிகழ்வில் சுமார் 60000 மக்கள் நேரடியாக கலந்துகொண்ட ஒரு நடைபயணம் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை இடம்பெற்றது. தமிழ் கட்சிகளும் சிவில் சமுகமும் போனமாதம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கும், மனித உரிமை பேரவையின் தலைவருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணம் இடம்பெற்றது. இந்தகடிதம் வெறுமனே ஒருசில அரசியல்கட்சிகளினதும் அமைப்புகளினதும் கோட்பாடல்ல மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களினது ஏகோபித்த கோரிக்கையாக காணப்படுகின்றது என்பதை நிலைநாட்டுவதற்காக நிரூபிக்கும் நோக்கத்துடனேயே இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது, ஒட்டுமொத்த சர்வதேசசமூகத்தினதும் பார்வையை ஈர்க்கக்கூடிய அளவிற்கு- மியன்மாரில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் போல – இந்தியாவில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் போன்று மிகவும் காத்திரமான ஒரு செய்தியை சர்வதேச சமுகத்திற்கு கொடுக்கக்கூடிய அளவிற்கும்,விசேடமாக அந்த கடிதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அதுதான் அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம். அந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் அதுவாயிருக்க-நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் வெறுமனே பத்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து – அந்த கோரிக்கைகள் வெறுமனே அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்து அந்த கோரிக்கைகள் தான் போராட்டத்தின் நோக்கமாக உள்ளது -அந்த போராட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இருக்கக்கூடிய வடக்குகிழக்கு தமிழ் மக்களினது தாயகம் என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழர்கள் ஒரு தனித்துவமான தேசம் என்ற கோட்பாட்டையோ சுயநிர்ணயஉரிமை என்ற கோட்பாட்டையோ அல்லது தமிழின அழிப்பிற்கு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக இன்னொரு சர்வதேச குற்றவியல் விதிமுறைகள் ஊடாக நீதி கேட்பதையும் வலியுறுத்தாமல் ஒட்டுமொத்த போராட்டத்தையும்; கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். நாங்கள் அந்த முயற்சியை ஒரு சாதாரண தவறாக கருதமுடியாது. சுமந்திரன் கடிதம் எழுதினபொழுதும் பங்குபற்றியவர்.அவருடைய கட்சியும் அவரும் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தனர்,போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவேளை அவருக்கு அதன் சரியான நோக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும்,நேற்றைய தினம் அந்த போராட்டத்தின் அடிப்படை நான்கு கோட்பாடுகளை வலியுறுத்தாமல் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி என்பதை-விசேடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவிசாரணை என்பதை வலியுறுத்திதான் அந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை முற்றுமுழுதாக மூடிமறைத்து – வெறுமனே சிறிலங்கா அரசாங்கத்தை நம்பி – சிறிலங்கா அரசாங்கத்திற்குத்தான் அந்த கோட்பாடுகளை – வெறுமனே அந்த பத்துக்கோட்பாடுகளையும் முன்வைப்பதாக சொல்லப்பட்டது. எம்மை பொறுத்தவரை அந்த போராட்டத்திலே எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு செய்த மாபெரும் துரோகமாக நாங்கள் அதனை பார்க்கின்றோம். நாங்கள் சுமந்திரனின் கருத்தினை வலுமையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.