பக்கங்கள்

24 ஜனவரி 2017

சுருவிலில் இளம்தாய் வெட்டிக்கொலை!

ஊர்காவற்துறை பகுதியில் தனிமையில் வீட்டில் இருந்த 27 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர் இன்று பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டமையினால் ஊர்காவல்துறை பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.சுருவில் பகுதியிலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவத்திற்காக பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர். இதன்போது, வீட்டில் தனிமையில் இருந்த ஒரு பிள்ளையின் தாயும் 7 மாதக் கர்ப்பிணியுமான 27 வயதுடைய நாகேந்திரன் கம்சிகா என்ற பெண்ணை தடியால் அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் தப்பியோட முற்பட்ட போது, பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்றுறை  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொலை சம்பவம் இடம்பெற்ற வீட்டினை ஊர்காவற்றுறை நீதிவான் வை.எம்.எம்.ரியால் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த பெண்ணை வீட்டு அறையினுள் வைத்து கடுமையாக தாக்கியுள்ளதுடன் வீட்டிலிருந்த கத்தியை பயன்படுத்தி வெட்டியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த இரத்த கறைகளையும் சந்தேக நபர்கள் கழுவிய நிலையில் பெண்ணை வீட்டு முற்றத்திற்குள் இழுத்து வந்து தடியினால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் கொலைச் சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த பெண்ணையும் முச்சக்கர வண்டி சாரதியையும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.