பக்கங்கள்

30 அக்டோபர் 2016

பிரபாகரன் படை என்ற பெயரில் எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிசாரை உடனடியாக இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லுமாறு ”பிரபாகரன் படை” என்ற பெயரில் இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ். நகரின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரங்கள், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வட மாகாணத்தை விட்டு வெளியேற 21 நாள் கால அவகாசமும் அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி இரவு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ”ஆவா கெங்ஸ்டர்” என்று அழைக்கப்படும் வாள் வெட்டுக் கும்பல் உட்பட யாழ் குடாநாட்டில் செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அனைவரினதும் கவனம் திரும்பியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற தினமான கடந்த 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் ஆவா கெங்ஸ்டர் என்ற பெயரில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டிருந்தது. அந்த துண்டுபிபிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தது போல், வடக்கில் தொடரும் போதைப் பொருள் விநியோகம், பாவணை மற்றும் சிங்கள, பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் தமது கரிசணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்கள் வாழும் பூவீகப் பிரதேசமான வடமாகாணத்தின் மண்ணும் எமது கலசாரமும் தனித்துவமானவை என்றும், அவை இன்று சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன என்றும் ” பிரபாகரன் படை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் சமுதாயம் சாராயம் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும். இவை சிங்கள அரசால் மேற்காள்ளப்பட்டுவரும் ஒரு திட்டமிட்ட செயலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. புத்தர் சிலைகள அமைப்பதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் எம் இனத்தை சினங் கொள்ள வைக்கும் செயலாக பார்க்கப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் சிங்கள பெரும் பிரதேசமாக மாற்றம் கண்டுவிடுமளவிற்கு சிங்களவாதிகளின் போக்குகள் மிகக்கடுமையாகவும், கீழ்தரமாகவும் இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை தம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாசறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை” என்ற இந்தக் குழு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களது உரிமை போராட்டம் தவிரிந்த கோரிக்கைகள் தவிர்த்து அடாத்தான போராட்டங்களை செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.அத்துடன் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், விலைமதிக்க முடியாத அரும்பெரும் சொத்துக்களான பல்கலைக்கழக மாணவர்களை திட்டமிட்டு அழிப்பதற்கு சிங்கள அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.எதிர்கட்சித் தலைவர் உட்பட தமிழ் அரசியல்வாதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து இடை விலகிக் கொள்ள வேண்டும் அல்லது, இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் காரியாலயம், பொலிஸ் நிலையங்களில் கடமை புரிகின்ற அனைத்து தமிழ் உறவுகளும், தங்களது கடமைகளை இன்னுமொரு பிரதேசத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை”, இதற்காக 21 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.