பக்கங்கள்

06 நவம்பர் 2014

தூங்கிக் கொண்டிருந்த மாணவியுடன் சிப்பாய் கட்டாய உறவுக்கு முயற்சி!

இராணுவத்தின் தலைமைத்துவப் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவியொருவரிடம் படைச்சிப்பாய் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றிருந்த போதும் இதுவரை காலமும் இராணுவத்தினரால் மூடி மறைக்கப்பட்டிருந்ததாக சிங்கள ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. கடந்த செப்டெம்பர் மாதம் கண்டி கண்ணொருவை இராணுவ முகாமில் பயிற்சியில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவியொருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஜன்னல் ஊடாக செலுத்தப்பட்ட கையொன்று அவரை தப்பான முறையில் ஸ்பரிசிக்க முயன்றுள்ளது.மாணவி திடுக்கிட்டு எழுந்து கூக்குரலிட்டபோது குறித்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் முகாமிலுள்ள இராணுவப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த மாணவி தூங்கிக் கொண்டிருந்த ஜன்னல் அருகே சேற்றுக் கால் தடங்கள் இருப்பதை கவனித்த இராணுவப் பொலிசார் அதனை வைத்து விசாரணைகளை மேற்கொண்டபோது கோப்ரல் தர படைச்சிப்பாய் ஒருவர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.எனினும் இந்தச்சம்பவம் இதுவரை காலமும் இராணுவம் மற்றும் உயர்கல்வி அமைச்சினால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கள ஊடகங்களில் இந்தச் செய்தி குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை இராணுவ ஊடக மையத்தின் பணிப்பாளர் ஜயநாத் ஜயசேனவை தொடர்பு கொண்ட போது இது ஒரு சாதாரண விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த படைச்சிப்பாய் தண்டனையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.