பக்கங்கள்

04 நவம்பர் 2019

அன்னம் பாலை குடித்து விட்டு தமிழர்களை தண்ணீராய் கைவிட்டு விடும்!

தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத் துரோகத்தினை செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென நேற்றைய தினம் தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இவ்வாறு துரோகத்தனமாக செயற்படும் என்பது ஏற்கனவே அறியப்பட்டதே. 6 கட்சிகள் இணைந்து கூட்டு முயற்சி எடுத்தபோது ஒரு கட்சி தவிர்ந்து ஏனைய ஐந்து கட்சிகள் ஓப்பந்தம் ஒன்றை செய்திருந்தனர். அதில் 13 அம்சங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சுமந்திரன் துரோகமான செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த கட்சிகள் ஏற்கனவே கூடியபோது தமிழரசு கட்சி இவ்வாறு செயற்படுவார்கள் என்பதை அன்றே அறிந்திருந்தோம். இந்த நிலையில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை கண்டு அவர்களிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியிருந்தது? இரண்டு தடவை அன்னம் கவிழ்ந்துவிட்டது. முதல் தடவை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதில் பயன் கிடைக்கவில்லை. இரண்டாவது தடவையாக நல்லாட்சி அரசிற்காக அன்னத்திற்கு வாக்களித்தோம். இரு தடவையும் தமிழ் மக்களிற்கு எவையும் கிடைக்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர் குற்றம் இளைத்தவர்களை பாதுகாப்பதாகவே கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா தான் தான் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கின்றார். அப்போது யார் கொலைகாரன். இந்த சரத் பொன்சேகாவும் கொலைகாரனே. இவர்களை போன்றவர்களை பாதுகாப்பதற்காக தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது? காலத்திற்கு காலம் நாம் ஆட்சி மாற்றத்தை செய்யவில்லை. ஆட்களைதான் மாற்றியுள்ளோம். நாம் ஆட்சியை மாற்றியதாக எண்ணிக்கொண்டு இதுவரை இருந்துள்ளோம். உண்மை அதுவல்ல. சந்திரிக்கா அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷ, அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன அடுத்தது யாராகவோ இருக்கலாம். அதனால் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்காது. அன்னம் பாலுடன் கலக்கப்பட்ட தண்ணீரிலிருந்து பாலை மட்டும் குடித்து விட்டு தண்ணீராக தமிழர்களை கைவிட்டுவிடும் என்பதே உண்மை என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.