பக்கங்கள்

31 ஜனவரி 2016

யோஷித்த ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை பெரும் நிதிமோசடிகள் தொடர்பான சிறப்பு பொலிஸ் பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிஎஸ்என் ஊடக நிறுவனத்தின் மூலம் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. யோஷித்த ராஜபக்ஷ கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, யோஷித்த ராஜபக்ஷவின் தந்தை மகிந்த ராஜபக்ஷ, மூத்த சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் அங்கு சென்றிருந்தனர்.ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யோஷித்த ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது இதனிடையே, சிஎஸ்என் நிறுவனத்தின் தலைவரான ரொஹான் வெலிவிட்ட மற்றும் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிபிசியின் கொழும்பு செய்தியாளர்கள் கூறுகின்றனர். மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை கைதுசெய்வதன் மூலம் தங்களின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்று மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 'நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தம் இருந்திருந்தால் நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸ் குழுக்களோ ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ உருவாகியிருக்காது' என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.