பக்கங்கள்

27 ஜூலை 2015

ஜனநாயகப் போராளிகளை மிரட்டுகிறதாம் இந்தியா!

யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம் செய்துள்ளோம். எம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நம்புகின்றோமென ஜனநாயக போராளிகள் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய எம்மை, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சர்வதேச நாடுகள் அனைத்தும், 2001ஆம் ஆண்டின் பின்னர் ஒன்றிணைந்து எம்மை இல்லாதொழிக்க செயற்பட்டன. நாம் மக்களுக்காக போராடியவர்கள். இன்று எமக்கு பின்னால் பலர் உள்ளனர் என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் எமக்கு பின்னால் வலிகளை சுமந்த மக்களே உள்ளனர். பொருளாதார ரீதியிலும் ஏனைய வழிகளிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு தற்போது யாரும் இல்லை. ஆகையால், போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் மக்களுக்காக குரல் கொடுக்க நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைக்கும் எண்ணம் எம்மிடம் இருந்திருந்தால் நாம் ஏன் அரசியல் அங்கீகாரம் கேட்டு அக்கட்சியிடம் செல்லவேண்டும்?. யாரையும் விமர்சிக்கும், குற்றம் சுமத்தும் எண்ணம் எம்மிடத்தில் இல்லை. ஏனெனில், மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் தான் நம் முன் உள்ளன. கூட்டமைப்புடன் இணைந்து அதனை பலப்படுத்தி காத்திரமான தலைமைகளை உருவாக்குவதற்காகவே நாம் அவர்களிடம் ஆதரவு கேட்டோம். ஆனால், எம்மை அவர்கள் நிராகரித்தனர். மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் தலைதூக்க வாய்ப்புக்கள் உள்ளது என்ற கருத்துக்கு நாம் அடையாளம் காட்டப்படுகின்றோம். இதிலிருந்து வெளிவருவதற்கு ஜனநாயக முறையில் செல்வதே ஒரே வழி. மக்களின் தற்போதைய தேவை எதுவோ அதை பெற்றுகொடுப்போம். போரின் வடு இல்லாத சூழலை உருவாக்க முயல்வோம். போராளிகள் ஜனநாயக வழிக்குள் வந்தால் மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படும். எனவே எமது கொள்கைகள், செயற்பாடு என்பன எதிர்வரும் புதன்கிழமை (29) சுதுமலையில் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்படும். போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் செல்வதற்கான ஆணையினை மக்கள் எமக்கு நிச்சயம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதுதென ஜனநாயகப்போராளிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.