பக்கங்கள்

15 மே 2015

புலிகளின் காலத்தில் பெண்களால் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது!

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ( 15.05.2015 ) புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன்மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள்கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.